குவாரிகள் விவகாரம்: விஜயபாஸ்கரிடம் 3 மணிநேரம் ஐடி அதிகாரிகள் துருவி துருவி விசாரணை!
இன்று மாலை நேரில் ஆஜராக வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது வருமானத் துறை.
சென்னை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வருமானவரித் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் 3 மணிநேரம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சென்னையில் உள்ள வீடு, புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள வீடு, திருவேங்கைவாசலில் அவரது குடும்பத்தினரின் பெயரில் உள்ள கல் குவாரி, மேட்டுச்சாலையில் உள்ள கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலம் உள்ளிட்ட சொத்துகளை முடக்க வருமான வரித் துறை உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்திற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலை நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமானவரித் துறையின் புலனாய்வுப் பிரிவு சம்மன் அளித்தது. இதையடுத்து விஜயபாஸ்கர் வருமானவரித்துறை அதிகாரிகள் முன் இன்று மாலை ஆஜரானார்.
குவாரிகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை 3 மணிநேரம் நடைபெற்றது.
விஜயபாஸ்கரிடம் ஏற்கனவே 2 முறை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒத்துழைப்பு தருவேன்
இந்த விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துவிட்டேன்.
மீண்டும் விசாரணைக்கு அழைத்தாலும் முழு ஒத்துழைப்பு தருவேன் என்றார்.












Click it and Unblock the Notifications