அதிகாரப்பூர்வமாக உடைந்தது அதிமுக சசி கோஷ்டி! இணைகிறது ஓபிஎஸ்- எடப்பாடி கோஷ்டி- கவிழுகிறது ஆட்சி!!
சசி, தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்ததன் மூலம் அதிமுகவின் சசிகலா கோஷ்டி அதிகாரப்பூர்வமாக உடைந்துவிட்டது. இனி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சிகளில் தினகரன் தீவிரமாகலாம்.
சென்னை: அதிமுகவின் சசிகலா கோஷ்டி இரண்டாக உடைந்துள்ளது. இதையடுத்து ஓபிஎஸ் கோஷ்டியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி இணைந்து செயல்பட போவது உறுதியாகி உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா ஆதிக்கத்தால் அதிமுக ஓபிஎஸ், அதிமுக சசிகலா என இரண்டு அணிகளாக பிளவுபட்டது. சசிகலா முதல்வராக பேராசைப்பட்டதால் சிறைக்குப் போக நேர்ந்தது.
சசிகலாவைப் போல துணைப் பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனும் முதல்வராக மும்முரமாக முயற்சித்தார். இதனாலேயே ஆர்கே நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்துக்கு காரணமான தினகரன் கோஷ்டியின் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டும் நடத்தியது. இதனால் விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால் டிடிவி தினகரனோ, விஜயபாஸ்கருக்கு முட்டுக் கொடுத்து பார்த்தார். இது ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு பெரும் ஆபத்தாக அமைந்தது. இருப்பினும் டிடிவி தினகரன் விடாப்பிடியாக இருந்தார். இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரனும் சிக்கினார்.
தற்போது ஓபிஸ் மற்றும் எடப்பாடி கோஷ்டிகள் இணைய முயற்சிக்கின்றன. இதற்கு சசிகலா, தினகரன் ஆதிக்கம் இல்லாத அதிமுக என்ற நிபந்தனைதான் முன்வைக்கப்படுகிறது. இதனையும் தினகரன் ஏற்க மறுத்து நான் நினைத்தால் ஆட்சியையே கவிழ்ப்பேன் என மிரட்டி வருகிறார்.
இச்சூழ்நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு அமைச்சர்கள், சசிகலா, தினகரன் குடும்ப வகையறாக்களை ஒதுக்கி வைக்கிறோம் என அமைச்சர் ஜெயக்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன் மூலம் சசிகலா கோஷ்டி உடைந்துவிட்டது என பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஓபிஎஸ்- எடப்பாடி கோஷ்டிகள் இணைவது உறுதியாகி உள்ளது.
தினகரன் தம் வசம் சில எம்.எல்.ஏக்களை வைத்து ஆட்சியைக் கவிழ்க்கவும் முயற்சிகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகிறார். ஆனால் தினகரனின் இந்த முயற்சி நிச்சயம் பலிக்காது... ஒருவேளை தினகரனால் எடப்பாடி அரசு கவிழும் நிலையில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறும் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.