அனைவரது வாழ்விலும் தீபாவளி நன்மையை உண்டாக்கட்டும்... காதர் மொகிதீன் நல் வாழ்த்து
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மக்களுக்கு தீபாவளி நல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சென்னை : தீபாவளிப் பண்டிகை அனைவரின் வாழ்விலும் நன்மையை உண்டாக்கட்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
தீபாவளியை கொண்டாடும் சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஒளி-பிரகாசம்-வெளிச்சம் என்பதுடன் தொடர்புடைய தீபாவளி திருநாளை கொண்டாடும் அனைவரின் வாழ்விலும் நன்மையும், உண்மையும்,மென்மையும் உன்னத மனிதநேய தன்மையும் ஒளி சிந்திட வாழ்த்துகிறோம்.
பழம்பெரும் நாடாகிய பாரத தேசத்து மக்கள் ஒன்றே குலம் - ஒருவனே தேவன் என்பதில் ஆழமான நம்பிக்கையுடையவர்கள்.
இந்த நம்பிக்கையே இந்திய மக்கள் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வை போற்றி நிற்கிறது. இந்தியாவில் வாழும் அனைத்து மத, மொழி, இன, கலாச்சாரங்களை கொண்ட அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் வாழ வேண்டும்.
இந்த உணர்வில் நம்பிக்கையுள்ள நல்லவர்கள் தேசத்துக்கு நல்வழி காட்டவும் வேற்றுமையில் ஒற்றுமை பேணுகிற மக்களாக எல்லோரும் வாழ்வும் இறையருளை வேண்டுகிறோம்.
இவ்வாறு காதர் மொகிதீன் கூறியுள்ளார்.