கேஸ் மானியம் ரத்து.. ஜெ. தீபாவும் கண்டிக்கிறாங்களாம்
கேஸ் மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அறிவிப்பிற்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: கேஸ் மானியம் ரத்து என்று மத்திய அரசு நேற்று முன் தினம் அறிவித்தது. இது ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் என்று தீபா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிலிண்டர் மானியம் கிடையாது.ரேசன் அட்டையும் கிடையாது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது ஈவு இரக்கமற்ற முறையில் தொடுத்துள்ள தாக்குதலுக்கு கடும் கண்டனம்;
அதிர்ச்சி அறிவிப்புகள்
இனிமேல் யாருக்கும் சமையல் எரிவாயு மானியம் இல்லையென்று மத்திய அரசு அறிவித்துள்ளது.ரூபாய் ஒரு இலட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட எந்தக் குடும்பத்திற்கும் ரேசன் அட்டை கிடையாது என்று எடுபுடி பழனிச்சாமி அரசு அறிவித்துள்ளது. இந்த இரண்டு அறிவிப்புகளும் நாட்டு மக்களை மிகப்பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிலிண்டர் விலை உயர்வு
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிவுடன் ரத்து செய்யபட உள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேத்திர பிரதான் அறிவித்துள்ளார்.சிலிண்டர் விலையை மாதம்தோறும் ரூபாய் நான்கு வீதம் உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மக்களின் சுமை
சிலிண்டரின் முழு விலையையும் தங்களின் பொறுப்பிலிருந்து கொடுத்துவிட்டு பின்னர் மானியத் தொகையை வங்கிகள் மூலம் ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் பெற்று வந்தன. இதுவே மக்களுக்குப் பெறும் சுமையாக இருந்து வருகிறது. ஆனால் எரிவாயு சிலிண்டருக்கு இனிமேல் மானியமே இல்லையென்று மத்திய அரசு அறிவித்திருப்பது ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சந்தை விலை
மானியமில்லா சிலிண்டர் விலை சென்னையில் ரூபாய் 574க்கு விற்பனை செய்யும் நிலையில் மானியவிலை சிலிண்டர் விலை 434 ரூபாயாக உள்ளது. பயனாளிகள் 574ரூபாயை முதலில் செலுத்திவிட்டு பின்னர் ரூபாய் 140 மானியத்தைப் பெற்று வந்தனர். தற்போது ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் மானிய விலையில் 12 சிலிண்டர் வரை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு மேல் தேவைப்பட்டால் சந்தை விலையில் அதாவது 574 ரூபாய்க்கு தான் பெற்றுக் கொள்ள வேண்டும்.
கேஸ் மானியம் ரத்து
ஆனால் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய முடியும் செய்ய இருப்பது கடும் கண்டனத்துக்குரியதுதாகும். மானிய விலை சிலிண்டரால் நாடு முழுவதும் 18 கோடியே 11இலட்சம் பேர் பயன் பெற்று வந்தனர். மத்திய அரசின் புதிய முடிவின் மூலம் அவர்களுக்கு இனி சிலிண்டர் மானியம் கிடைக்காது. மத்திய அரசின் இந்த மானிய ரத்து அறிவிப்பை வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக இந்த மானிய இரத்து அறிவிப்பை திரும்ப பெற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.
ரேஷன் அட்டை ரத்து
மேலும் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தமிழகத்தின் பெருவாரியான குடும்பங்களுக்கு இனி ரேசன் அட்டையே கிடையாது என்று விதிமுறையில் வரையறுக்கப்பட்ட செய்தி குறிப்பு தமிழக அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழக உணவு துறை அமைச்சர் இதை மறுத்துப் பேசுகிறார்.
வஞ்சிக்க வேண்டாம்
தமிழக மக்களை வஞ்சிக்க வேண்டாம். மத்திய அரசின் உணவு பாதுக்காப்பு சட்டத்தின்படி நமது தமிழக மக்களைப் பழிவாங்க வேண்டாம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்தியாவே வியக்கும் வண்ணம் ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நியாயவிலை கடைகள் மூலம் கிடைப்பதற்கு பெறும் சாதனை புரிந்தார்.
ஜெ. வழி ஆட்சியா?
ஆனால் அம்மா வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறி தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழக குடும்பங்களைக் கடுமையான துயரத்துக்குத் தள்ளாமல் ரேசன் அட்டை கிடையாது என்ற அறிவிப்பை மக்களின் நலன் கருதி திரும்பப் பெற வேண்டுமென எடப்பாடி அரசை மீண்டும் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன். இவ்வாறு தீபா கூறியுள்ளார்.