மல்லிகைப்பூவை இனி கற்பனை மட்டுமே செய்யணுமா?... கிலோ ரூ. 7,500!
வரத்து குறைவு காரணமாக மல்லிகைப் பூவின் விலை வரலாறு காணாத விலை உயர்வைக் கண்டுள்ளது.
ஆண்டிப்பட்டி : பனிப்பொழிவால் மல்லிகைப் பூவின் வரத்து குறைந்துள்ளது. இதனால் மல்லிகைப் பூவின் விலை வரலாறு காணாத உயர்வு கண்டுள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.7,500ஐ எட்டியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 400 ஏக்கரில் மல்லிகைப்பூ சாகுபடி செய்யப்படுகிறது. கடுமையான பனிபொழிவு காரணமாக மொட்டுகள் கருகி மல்லிகைப் பூ வரத்து குறைந்துள்ளது.
நாள் ஒன்றிற்கு சுமார் 500 கிலோ வரை மல்லிகைப்பூ வரத்து இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக 50 கிலோ என்ற அளவிலேயே வரத்து இருக்கிறது. இதனால் கடந்த வாரங்களில் ரூ. 4 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ இன்று ஒரு கிலோ ரூ.7,500க்கு விற்பனையானது.

விவசாயிகள் மகிழ்ச்சி
விளைச்சல் குறைந்தாலும் அதிக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளை வைத்துள்ளவர்கள் மல்லிகைப் பூவின் விலையை கேட்டு மலைத்துப் போயுள்ளனர்.

நெல்லை, சத்தியமங்கலம் சந்தைகளிலும்
இதே போன்று நெல்லை மாவட்டத்திலும் வரத்து குறைவால் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ மல்லிகைப் பூவின் விலை ரூ. 6,500ஐ தொட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலும் மல்லிகைப்பூவின் விலை ரூ. 6 ஆயிரத்திற்கும் விற்கப்படுகிறது.

சுப முகூர்த்த நாட்கள்
கேரளா மற்றும் தமிழகத்தின் தற்போது சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறுவதால் மல்லிகைப் பூவிற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. எனினும் ரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 7,500 வரை மல்லிகைப் பூ விற்பனை செய்யப்படுவதால் வாங்குவதற்கே மக்கள் அச்சப்படுகின்றனர்.

மிரட்டும் விலை
எத்தனை எத்தனை பூக்களை வைத்து அழகு பார்த்தாலும், மல்லிகைப் பூவிற்கு இருக்கும் மவுசு தனி தான். இந்நிலையில் பனி காலம் முடியும் வரை மல்லிகைப் பூவை கற்பனை மட்டுமே செய்து பார்க்க முடியும் என்ற அளவிற்கு விலை மக்களை மிரட்டுகிறது.












Click it and Unblock the Notifications