விஜயகாந்த்தை விடாமல் விரட்டி கெஸ்ட் ஹவுஸில் வைத்து பார்த்த ஜவடேகர்.. பாஜகவுக்கு இது தேவையா??
சென்னை: தமிழக பாஜகவின் மேலிடப் பார்வையாளரும்,மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் நேற்று நடந்து கொண்ட விதம், பாஜகவைப் பார்த்து அத்தனை பேரும் அடப் பாவமே என்று கை கொட்டி சிரிக்கும் அளவுக்கு இருந்தது. அந்த அளவுக்கு விஜயகாந்தைப் பார்க்க (தெருத் தெருவாக அலையாததுதான் பாக்கி) நேற்று ரொம்பப் படாதபாடு பட்டு விட்டார் பிரகாஷ் ஜவடேகர்.
இவரது வருகை குறித்து மாநில பாஜக தலைவர்களுக்கேத் தெரிவிக்கப்படவில்லையாம். இவர் செய்த கூத்தால் பாஜகவினர் மட்டுமல்லாமல் மீடியாக்களும் ரொம்பவே குழம்பிப்போய் விட்டன.
முதலில் வந்தார் என்று செய்திகள் வந்தன. பிறகு பயணம் ரத்து என்று தகவல்கள் வந்தன. ஆனால் திடீரென இவர் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்தார். அதன் பிறகு மாலையில் விமான நிலையத்தில் தென்பட்டார். பல்கலைக்கழகத்தில் ஒரு கலந்துரையாடலுக்காக வந்ததாக பேச்சு வேறு பேசினார். இத்தனைக்கும் அது பெரிய கலந்துரையாடல் கூட இல்லை. நாடாளுமன்றம் நடந்து கொண்டுள்ள நிலையில் ஜாவேட்கர் வந்தால் தான் அந்த கலந்துரையாடல் நடக்கும் என்ற நிலையும் இல்லை. ஒரு கூட்டணிக்காக பிரகாஷ் ஜவடேகர் போன்ற மத்திய அமைச்சர் இப்படி நடந்து கொண்டது, அந்தக் காட்சிக்கு எந்த அளவுக்கு மாண்பு சேர்க்கும் என்றுதான் புரியவில்லை.
அதை விட கொடுமை, இப்படி இவர்களை அலைய விட்டு வேடிக்கை பார்க்கும் விஜயகாந்த்திடம் ஏன் இப்படிப் போய் விழுந்து விழுந்து இவர்கள் கெஞ்சுகிறார்கள் என்பதும் இன்னொரு ஆச்சரியம்.
நேற்று நடந்த கூத்துக்களை ஒரு பார்வை பார்ப்போம்...

காலையில் வந்த ஜவடேகர்
நேற்று காலையில் ஜவடேகர் சென்னை வந்துள்ளார். வந்தவர் நேராக கிண்டியில் உள்ள லீமெரிடியன் ஹோட்டலுக்குப் போய் விட்டார். தான் வந்தது குறித்து யாருக்குமே அவர் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

விஜயகாந்த்தைச் சந்திக்க முயற்சி
ஹோட்டலுக்குப் போய் தங்கிய பிறகு விஜயகாந்த்தைச் சந்திக்கும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளார். ஆனால் அவரை சந்திக்க விஜய்காந்த் விரும்பவில்லை. விஜயகாந்த்துக்கு திருக்கோவிலூரில் ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சி இருப்பதால் சந்திக்க முடியாத நிலை இருப்பதாக ஜவடேகருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுக்கு ஒரு இடத்தில்
இந்த நிலையில் விஜயகாந்த் வீட்டின் முன்பு செய்தியாளர்கள் குவிந்து விட்டனர். எப்படியும் ஜவடேகர் வருவார் என்ற நம்பிக்கையில். இதையடுத்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா வீட்டைவிட்டு வெளியேறி தனது தம்பி சுதீஷ் வீட்டுக்குப் போய் விட்டார். சுதீஷோ கட்சி ஆபீஸுக்குப் போய் விட்டார். இதனால் செய்தியாளர்கள் குழம்பிப் போயினர்.

திருக்கோவிலூருக்குப் புறப்பட்ட விஜயகாந்த்
இந்த சமயத்தில் பிற்பகல் வாக்கில் திடீரென விஜயகாந்த் கிளம்பி வெளியே வந்தார். அவர் ரிஷிவந்தியம் போவதாக தகவல்கள் வெளியாகின. சரி. இனிமேல் ஜவடேகர் சந்திப்பு இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்தனர் செய்தியாளர்கள்.

அங்குதான் டிவிஸ்ட்!
ஆனால் விஜயகாந்த் தரப்பு அங்குதான் டிவிஸ்ட் வைத்தது. அதாவது வீட்டை விட்டு பிற்பகலில் கிளம்பிய விஜயகாந்த், திடீரென நடுவில் மாயமாகி விட்டார். அதாவது மாலை வரை அவர் தாம்பரத்தைத் தாண்டவில்லை. மாறாக, 4 மணிக்கு மேல்தான் அவர் பெருங்களத்தூரையே தாண்டியுள்ளார்.

இடையில் நடந்தது என்ன?
இந்த கேப்பில் என்ன நடந்தது.. விஜயகாந்த் எங்கு போனார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் நடந்தது என்னவென்றால்.. விஜயகாந்த்தை எப்படியும் சந்திக்க வேண்டும், தயவு செய்து ஏற்பாடு செய்யுங்கள் என்று கெஞ்சாத குறையாக ஜவடேகர் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து சரி வாருங்கள் என்று கூறினாராம் விஜயகாந்த்.

அனகை முருகேசன் கெஸ்ட் ஹவுஸில் வைத்து
இதையடுத்து திருக்கோவிலூர் புறப்பட்ட விஜயகாந்த் வழியில் டேக் டைவர்ஷன் ஆகி தனது காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் அனகை முருகேசனின் கெஸ்ட் ஹவுஸுக்கு வண்டியை விட்டுள்ளார். அங்கு வைத்துத்தான் அவர் ஜவடேகரைச் சந்தித்ததாக கூறப்படுகிறது.

பிரேமலதாவும் வந்தார்
மேலும் பிரேமலதாவும் தனது தம்பி வீட்டிலிருந்து கிளம்பி இங்கு வந்து விட்டார். அவருடன் மூத்த மகன் விஜய பிரபாகரனும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. அங்கு வைத்து ஜவடேகருடன் விஜயகாந்த், பிரேமலதா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இடையில் தத்தளித்த ஜவடேகர்
இந்த சந்திப்புக்கு முன்னதாக விஜயகாந்த்தைச் சந்திக்க வழியில்லாத நிலை காணப்பட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகத்திற்குப் போயுள்ளார் ஜவடேகர். அங்கு அவர் நடத்திய கூத்து அதற்கும் மேல்!

2.30 மணிக்கு வந்தார்
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில் பிற்பகல் 2.30 மணிக்கு ஜவடேகர் வந்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தேசிய கடலியல் நிர்வாக மையத்திற்கு அவர் வருகை தந்தார். அங்கு ஜவடேகரின் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிதியுதவியுடன் ஆய்வுகள் நடக்கின்றன. அதுகுறித்த விவரங்களை அவர் கேட்டார். பிரசன்டேஷன் செய்யுமாறும் கோரினார். அப்போது துணைவேந்தரும் இல்லை, பதிவாளரும் இல்லை என்றார்.

இதுக்குப் பெயர்தான் கருத்தரங்காம்!
இப்படி இவராகவே வாலன்டியராகப் போய் உட்கார்ந்து திரும்பியதைத்தான் சுற்றுச்சூழல் கருத்தரங்குக்குப் போனதாக பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கதை விட்டார்.

வேஸ்ட் பயணம்
ஜவடேகர் நேற்று வந்ததும் கூட பாஜகவுக்கு எந்தப் பலனையும் தரவில்லையாம். விஜயகாந்த் உறுதியாக எதையும் சொல்லவில்லையாம். இதனால் பெரும் ஏமாற்றத்துடன்தான் ஜவடேகர் டெல்லி திரும்பிப் போனாராம். அவரது பயணம் வேஸ்ட் என்று பாஜகவினரே கருதுகின்றனர்.

திருப்பதியில் இருந்த தமிழிசை
ஜவடேகர் சென்னை வந்தபோது மாநிலத் தலைவர் தமிழிசை திருப்பதியில் இருந்தார். மத்திய அமைச்சர் பொன். ராதாதாகிருஷ்ணன் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்தார். ஆனால் அவருக்குக் கூட ஜவடேகர் வருகை குறித்துத் தெரியாதாம்.

தேவையில்லால் அலைகிறோம்
நேற்றைய நிகழ்வு குறித்து பாஜக மூத்த துணைத் தலைவர் ஒருவர் கூறுகையில், தேமுதிகவுக்கு, பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் இப்படி அலைய விட்டிருக்க மாட்டார்கள். பகிரங்கமாக சந்திக்க ஒப்புக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வர மாட்டார்கள். வரும் எண்ணத்தில் இருப்பது போலத் தெரியவில்லை. இப்படி அலைவதை விட்டு விட்டு தேர்தல் பிரசாரத்தில் பாஜக தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதே கட்சியினர் எண்ணம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications