இந்தியை திணித்தால் தனித் தமிழ்நாடு; ஜெ.க்கு புகழாரம்: வைகோ பரபரப்பு பேச்சு!
சென்னை: இந்தியைத் திணித்தால் தமிழகம் தனித்துப் போவதைத் தவிர வேறுவழியில்லை என்றும் ஈழத் தமிழர் பிரச்சனையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றிய ஜெயலலிதாவுக்கு வரலாறு பொன்மகுடம் சூட்டும் என்றும் மதிமுக பொதுச்செயலர் வைகோ பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்னை தியாகராயர் நகரில் பினாங்கு மாநாட்டு பிரகடன விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
ஈழ போராட்டத்தை தமிழக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு, முதலில் அவர்களை மது பழக்கம் இல்லாமல் ஒழுக்கம் உள்ளவர்களாக மாற்ற வேண்டும். அதற்கு பிறகு தான் நம் லட்சியத்திற்கு அவர்களை அழைத்து செல்ல முடியும்.

மோடி மீது தாக்கு
இலங்கையில் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ராஜபக்சேவுக்கு, பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து கூறியதன் மூலம் பிரதமர் பதவியை அவர் களங்கப்படுத்தி விட்டார்.

வாஜ்பாய் வழிதான் தேவை
இதுவரையிலும் எந்த பிரதமரும், இலங்கை உள்பட எந்த நாட்டு தேர்தல் என்றாலும், வெற்றி பெறுவதற்கு வாழ்த்து கூறியது இல்லை. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட தமிழர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இலங்கைக்கு ஆயுத உதவியோ, பண உதவியோ செய்ய மாட்டோம், ஆயுதங்களை விலை கொடுத்து வாங்குவதாக இருந்தாலும் நாங்கள் அவர்களுக்கு விற்பதாக இல்லை என்று அறிவித்தார். வாஜ்பாய் வழியை நரேந்திரமோடி கடைபிடிக்க வேண்டும்.

பினாங்கு பிரகடனம்
5 மீனவர்கள் விடுதலையில் நரேந்திரமோடி அரசு நாடகம் ஆடியது. தமிழ் ஈழம் தொடர்பாக உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு அந்தந்த நாடுகளில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதை ஐ.நா. மேற்பார்வையில் நடத்த வேண்டும். அத்துடன் தமிழக மீனவர்களை இந்திய அரசு பாதுகாக்க வேண்டும் உள்பட பல்வேறு பிரகடனங்களை பினாங்கில் நிறைவேற்றினோம்.

ஜெ.க்கு பொன்மகுடம்
இதே தீர்மானத்தை தமிழக சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றிய துணிச்சல் ஜெயலலிதாவுக்கு உண்டு. அதனால் வரலாறு உங்களுக்கு பொன் மகுடம் சூட்டும்.

7 தமிழர் விடுதலை
அதேபோல் ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். இதே தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம். ஆனால் அதற்கு மத்திய அரசு நமக்கு சாதகமாக இல்லை. மாறாக ராஜபக்சேவுக்கு வாழ்த்து கூறும் நிலையில் தான் உள்ளது. நம் பக்கம் நியாயம் உள்ளது. பிரிவினையை நாங்கள் கேட்கவில்லை. இழந்த சுதந்திரத்தை தான் கேட்கிறோம்.

பொதுவாக்கெடுப்புக்கு ஏன் அச்சம்?
பொது வாக்கெடுப்பு என்றவுடன் மத்திய அரசு பயப்படுவதற்கு காரணம் 1948, 1952-ம் ஆண்டுகளில் காஷ்மீர் இந்தியாவுடன் இருக்க வேண்டுமா? பாகிஸ்தானுடன் செல்ல வேண்டுமா? என்று பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நேரு கூறியிருந்தார். ஆனால் அந்த கோரிக்கை இதுவரைக்கும் நிறைவேற்ற முடியவில்லை. இதே பிரச்சினை இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தால் காஷ்மீர் பிரச்சினையை ஏற்படுத்தி விடுவார்கள் என்ற பயம் மத்திய அரசுக்கு உள்ளது.

நெய்வேலி மின்சாரம் எங்களுக்கே..
கர்நாடக அரசு தமிழகத்திற்கு நதிநீர் பிரச்சினையில் வஞ்சகம் செய்து வருகிறது. மத்திய அரசு அதை தடுக்க மறுக்கிறது. தங்களுடைய மாநிலத்தில் உற்பத்தியாகும் நதிகள், தங்களுக்கே சொந்தம் என்று கூறினால், நாங்களும் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் எங்களுக்கே சொந்தம் என்று கூற வேண்டிய நிலைக்கு எங்களை தள்ளி விடாதீர்கள்.

இந்தியை திணித்தால்..
இந்தி திணிப்பை தமிழகத்தில் திணித்தால், தமிழகம் தனித்து போவதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு வைகோ பேசினார்.












Click it and Unblock the Notifications