ஈரான் சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்
சென்னை: ஈரான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரும் நேற்று சென்னை வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் தமிழக அரசு செலவில் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், காரங்காடு, முள்ளிமுனை, மோர்ப்பனை, திருப்பாலைக்குடி, ரோச்மாநகர் மீனவ கிராமங்களை சேர்ந்த, 10 மீனவர்; நாகப்பட்டினம் மாவட்டம், பழையார் கிராமத்தை சேர்ந்த, ஒரு மீனவர்; கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மற்றும் ஆரோக்கியபுரத்தை சேர்ந்த, ஐந்து மீனவர் என, மொத்தம் 16 பேர், சவுதி அரேபியா நாட்டில், தனியார் மீன்பிடி நிறுவனத்தில், ஒப்பந்த அடிப்படையில், மீன்பிடித் தொழிலாளராக பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள், கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம், மீன் பிடிக்க சென்றபோது, தவறுதலாக, ஈரான் நாட்டு கடல் எல்லைப் பகுதிக்குள் சென்றனர். அவர்களை, ஈரான் கடலோர காவல் படையினர் கைது செய்து, சிறையில் அடைந்தனர். அந்நாட்டு நீதிமன்றம், அவர்களுக்கு 5,750 அமெரிக்க டாலர்( ரூ.3 லட்சத்து 75 ஆயிரம்) அபராதம் மற்றும் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தது.
இதை அறிந்த, முதல்வர் ஜெயலலிதா, அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த ஜூலை மாதம், பிரதமருக்கு கடிதம் எழுதினார். மேலும், அந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார். முதல்வரின் தொடர் முயற்சி காரணமாக, 16 தமிழக மீனவர்களும், நேற்றுமுன்தினம், ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்கள் விமானம் மூலம், நேற்று மும்பை விமான நிலையம் வந்தனர். அவர்களை வரவேற்று, அரசு செலவில், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க, நடவடிக்கை எடுக்கும்படி, மீன்வளத் துறை அமைச்சருக்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
ஈரான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரும் நேற்று காலை மும்பை வந்தனர். அவர்களை சென்னை அழைத்து வருவதற்காக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் மும்பை சென்றார். அங்கிருந்து தமிழக மீனவர்கள் 16 பேரையும் நேற்றிரவு சென்னை அழைத்து வந்தார்.
சென்னை அழைத்து வரப்பட்ட மீனவர்கள் அனைவரும் அவர்களது சொந்த ஊரான, குமரி, நாகை, ராமநாதபுரம் போன்ற ஊர்களுக்கு தமிழக அரசு செலவில் அனுப்பிவைக்கப்பட்டனர்.