முதல்வரானதில் இருந்து 145 நாட்கள் கொடநாட்டில் ஜெ. ஓய்வு: ராமதாஸ் தாக்கு
விழுப்புரம்: 2011ம் ஆண்டில் முதல்வராக பதவியேற்றதில் இருந்து இதுவரை 145 நாட்கள் கொடநாட்டில் ஓய்வு எடுத்துள்ளார் ஜெயலலிதா என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஆங்கிலேய வைஸ்ராய் கோடை வாசஸ்தலம் செல்வது போன்று ஜெயலலிதா கொடநாடு சென்றுள்ளார். அவர் முதல்வராக இருக்க தகுதி இல்லாதவர். 2011ம் ஆண்டில் முதல்வராக பதவியேற்றதில் இருந்து இதுவரை 145 நாட்கள் கொடநாட்டில் ஓய்வு எடுத்துள்ளார்.
வாரத்தில் அவர் 40 நிமிடங்கள் கூட வேலை செய்வது இல்லை. மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் கொடநாட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். அரசு அதிகாரிகளை கொடநாட்டுக்கே வரவழைத்து நிர்வாகம் செய்து வருகிறார்.
பொது விநியோகத் திட்டத்தின்கீழ் கொள்முதல் செய்யப்படும் பொருட்களில் பாதி கள்ளச் சந்தைகளில் தான் விற்பனை செய்யப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விற்க ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் டன் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டாலும் அவற்றில் பாதியை அரசே கள்ளச்சந்தைக்கு அனுப்பி வைக்கிறது.
பதுக்கல்காரர்களுக்கும், அரசுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இறக்குமதி செய்யப்படும் பருப்பு குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அரசு தெரவித்துள்ளது மக்களை ஏமாற்றும் செயல் ஆகும் என்றார்.