ஜெயலலிதா, கனிமொழியை பாராட்டியே ஆக வேண்டும்... ஏன்?
சென்னை: செய்ததைச் சொல்லியும், சொன்னதைச் செய்வோம் என்று கூறியும் வாக்கு கேட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள் இரு பெண் தலைவர்கள். தங்களது ஆட்சி, கட்சி கொடுத்த வாக்குறுதிகள், அதை நிறைவேற்றினார்களா இல்லையா என்பதையே இவர்கள் பிரதானமாக பேசி வருகிறார்கள். மற்ற தலைவர்களுடன் ஒப்பிடுகையில் இவர்களது பிரசாரம் கேட்கும்படியும், பார்க்கும்படியும் உள்ளது.. அவர்கள் ஜெயலலிதா மற்றும் கனிமொழி.
என்னதான் ஜெயலலிதா பிரசாரம், சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிக்கை படிப்பது போல உளளது என்று கூறினாலும் கூட, அவர் தனது ஆட்சிக்காலத்தில் என்ன செய்தேன் என்பதையே பெரும்பாலும் பேசுகிறார்.

தனிமனித விமர்சனமோ, அறுவெறுப்பான வார்த்தைப் பிரயோகமோ அல்லது ஆவேசப் பேச்சுக்களோ பெரும்பாலும் இல்லை. திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சிக்கிறார், அவ்வளவுதான். அது கூட இயல்பானதுதான், அதிமுக என்றால் கருணாநிதியைத் திட்டுவதும், திமுக என்றால் ஜெயலலிதாவை திட்டுவதும் இயல்பானதுதான்.
அதேபோல திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியின் பிரசாரத்திலும் நாகரீகம் தலை தூக்கிக் காணப்படுகிறது. கடந்த கால திமுக ஆட்சியின் சாதனைகளை, அழகாக, எளிய சொற்களில் பட்டியலிட்டுப் பேசுகிறார் கனிமொழி. தனி நபர் விமர்சனமும் கூட நாகரீகமாகவே காணப்படுகிறது.
இதற்காகவே ஜெயலலிதா, கனிமொழியைப் பாராட்டலாம். அதேசமயம் மற்ற தலைவர்களின் பேச்சுக்களைப் பார்த்தால் சற்றே எரிச்சல்தான் வருகிறது. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் என்ன பேசுகிறார் என்றே தெரியவில்லை, புரியவில்லை. சமீப காலமாக மு.க.ஸ்டாலினை ஒருமையிலும் விமர்சித்துப் பேசுகிறார். ஜெயலலிதா, அதிமுக அமைச்சர்களை கடுமையாக கிண்டலடிக்கிறார. அவரது மேடைப் பேச்சை கேட்பதற்காக யாரும் வருவதில்லை. மாறாக அவரை வேடிக்கை பார்க்கவே பெரும்பாலானோர் வருகிறார்கள். சமீபத்தில் கூட ஜெயலலிதா மாதிரி நடந்து காட்டி நடித்த காட்சியை பலரும் கண்டு ரசித்தனர்!
பிரேமலதா விஜயகாந்த்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். சுற்றிச் சுற்றி ஜெயலலிதாவையும், அதிமுக அமைச்சர்களையும் விமர்சிப்பதிலேயே அவரது பிரசாரத்தின் பெரும் பகுதி போய் விடுகிறது. அடிமைகள், நெஞ்சைத் தூக்கிக் கொண்டு நடக்க வேண்டாமா, அல்லி ராணி போன்றவற்றை கண்டிப்பா பேச அவர் மறுப்பதில்லை. ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களைப் பற்றி மட்டுமே அவர் பெரும்பாலும் பேசுகிறார். தேமுதிக என்ன செய்யப் போகிறது என்பதை அவர் அழுத்தம் திருத்தமாக பெரும்பாலும் சொல்வதில்லை. இவரும் தனி நபர் விமர்சனத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.
ஜெயலலிதாவுக்கு ஆபரேஷன் செய்து விட்டார்கள் என்ற பேச்சும், சதாம் உசேன் குறித்த அவரது பேச்சும் பலரை முகம் சுளிக்கவும், எரிச்சலூட்டவும் செய்துள்ளது.
வைகோ ஆவேசமாக பேசுகிறார். அடிக்கடி கேஸ் போட்டுப் பாரு என்று சவால் விடுகிறார். வக்கீல் என்பதற்காக வாய்க்கு வந்ததையெல்லாம் பேசலாமா என்று தெரியவில்லை. திருமாவளவன் அளவாக பேசுகிறார், அருமையாகப் பேசுகிறார். கம்யூனிஸ்ட் தலைவர்களின் பேச்சுக்களும் பரவாயில்லை ரகம்தான்.
மு.க.ஸ்டாலின் ஜெயலலிதா, அமைச்சர்களை கடுமையாக சாடிப் பேசுகிறார். திமுக ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிடுகிறார் என்றாலும் கூட தனி மனித விமர்சனமும் தூக்கலாகவே இருக்கிறது.
பாமகவின் அன்புமணி ராமதாஸ் தான் முதல்வரானால் என்ன செய்யப் போகிறேன் என்பதை மிக மிக விரிவாகப் பேசி வருகிறார். நிறைய விஷயங்கள் நன்றாகவே உள்ளன. ஆனால் யாரும் இதைக் கேட்கிறார்களா என்பதுதான் தெரியவில்லை.
நாம் தமிழர் தலைவர் சீமானும் தனது கட்சியின் நோக்கம், தங்களது போட்டியின் நோக்கம் போன்றவற்றை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார். அந்தப் பாதையில் அவர் போய்க் கொண்டிருக்கிறார்.
இதையும் சொல்ல வேண்டும். அதிமுக டிவியான ஜெயா டிவியில் நடிகர் சிங்கமுத்துவை வைத்து ஒரு காமெடி ஷோ செய்கிறார்கள். நல்லா சொல்றாங்கய்யா டீட்டெய்லு என்பது அதன் பெயர். அதில் விஜயகாந்த்தை அப்படிப் போட்டுத் தாக்குகிறார்கள். அவரது உடல் நிலை குறித்து அநாகரீகமாக விமர்சிக்கிறார்கள். என்ன டேஸ்ட் இது என்றுதான் தெரியவில்லை.
தேர்தல் வந்து விட்டாலே ஒவ்வொரு தலைவர்களும் ஆவேசமாக, ஆசாபாசமாக பேசிக் கொள்வது இயல்புதான். ஆனால் இந்தத் தேர்தலில் தலைவர்களின் உடல் நிலையை வைத்து பலரும் தனி நபர் விமர்சனங்களில் குதித்திருப்பதுதான் சற்று வித்தியாசமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications