பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை... குன்னூரில் வழங்கி தொடங்கி வைக்கிறார் ஜெ.
குன்னூர்: பொங்கல் திருநாளையொட்டி ரேஷன் கடைகளில் ஆண்டுதோறும் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா குன்னூரில் நாளை தொடங்கி வைக்கிறார்.
ஆண்டுதோறும் ஏழை -எளிய மக்களுக்கு அரசு சார்பில் இலவச வேட்டி- சேலை வழங்கப்படுகிறது. விலையில்லா வேட்டி- சேலையும் பொங்கலுக்கு முன்னதாக வழங்கப்படும். விலையில்லா வேட்டி- சேலை திட்டத்தின் மூலம் பல லட்சம் ஏழை குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி- சேலை வழங்கும் திட்டங்கள் தொடக்க விழா நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வளனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. முதல்வர் ஜெயலலிதா திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
மேலும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன் முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். விழாவில் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நீலகிரி மாவட்ட கலெக்டர் பொ.சங்கர் உள்ளிட்ட அரசு துறை செயலாளர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து பொங்கல் பரிசு மற்றும் விலையில்லா வேட்டி- சேலைகள் தமிழகம் முழுவதும் வினியோகம் செய்யப்படும். திங்கட்கிழமை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications