'அம்மா'வுக்கு ஜாமீன் மறுப்பு: தமிழக-கர்நாடக எல்லையில் பதட்டம்
சென்னை: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக-கர்நாடக எல்லையில் பதட்டம் நிலவுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றம் கடந்த 27ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்த ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து ஜெயலலிதா ஜாமீன் கோரி கர்நாடக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையை நீதிபதி ரத்னகலா அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். பின்னர் ஜெயலலிதா சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரா ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். முன்னதாக ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்ததாக பரவிய தகவலால் மகிழ்ச்சி அடைந்த அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். ஆனால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும் பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.
ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து தமிழக-கர்நாடக எல்லையில் பதட்டமான சூழல் நிலவுகிறது.