'கபடிக்கப்படிக்கப்படிக்கப்படி'... அம்மா பிறந்த நாளுக்காக மதுரையில் கபடிப் போட்டி.!
மதுரை: முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் அகில இந்திய கபடி போட்டியை அமைச்சர் செல்லூர் கே.ராஜு துவக்கி வைத்தார்.
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் 66வது பிறந்த நாள் விழாவை மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
அதன் பேரில், அகில இந்திய அளவிலான ஆண், பெண் கபடி போட்டிகள் தமுக்கம் மைதானத்தில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த போட்டிகளை மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜு நேற்று துவக்கி வைத்தார்.
இந்த கபடி போட்டிகள் நாளை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும். இந்த போட்டிகளில் இந்தியன் ஏர்போர்ட், விஜயா வங்கி, கேரளா ஸ்டேட், மத்திய போலீஸ், தமிழ்நாடு போலீஸ், சிவந்தி அகாடமி ,கலா சிமெண்ட், யாதவா கல்லூரி, லேடி டோக் கல்லூரி, பாத்திமா கல்லூரி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடுகிறது.
இறுதி போட்டியில் வெற்றி பெறும் ஆண், பெண் கபடி அணிகளுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரிசு கோப்பைகளையும், ரொக்கப் பரிசுகளையும் வழங்குகின்றார்.
ஆண்கள் பிரிவில் முதலிடம் பெறும் அணிக்கு ஒரு லட்சத்து ஆறுபத்தி ஆறு ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரத்து 66 ரூபாயும், மூன்றாம், நான்காம் பரிசாக 40 ஆயிரத்து 66 ரூபாயும் இவைகளுடன் அம்மா கோப்பைகளும் பரிசாக வழங்கப்படுகிறது.
பெண்கள் பிரிவில் முதல் பரிசாக 66 ஆயிரத்து 66 ரூபாயும், இரண்டாம் பரிசாக 46 ஆயிரத்து 66 ரூபாயும், மூன்றாம் பரிசாக 26 ஆயிரத்து 66 ரூபாயும், இவைகளுடன் அம்மா பரிசு கோப்பையும் வழங்கப்படுகிறது. போட்டிகளை பார்வையாளர்கள் இலவசமாக காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி,கே, ஜக்கையன், துணை மேயர் ஆர்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.