மறக்க முடியாத ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக்காலம்...!
சென்னை: 10 வருடங்களுக்கு தேரத்லில் போட்டியிட முடியாத நிலையை வந்தடைந்திருக்கிறார், தமிழக அரசியலில் பல புதுமைகளை, புரட்சிகளைப் படைத்த ஜெயலலிதா.. அவரது இந்த நிலைக்கு அவரேதான் காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் ஜெயலலிதா முதல் முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்தபோது, தொடக்க ஆண்டுகளில் உண்மையிலேயே நாட்டினரின் கவனத்தை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் ஈர்த்தவர்.
ஆனால் எப்போது சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தின் கீழ் அவர் போனாரோ, சசிகலா குடும்பத்தின் பேச்சுக்கு தாளம் போட ஆரம்பித்தாரோ, சசி குடும்பத்தின் கையில் ஆட்சியை கிட்டத்தட்ட ஒப்படைத்தாரோ அன்றே அவரது சரிவும் ஆரம்பமாகி விட்டது என்பதே உண்மை.
உண்மையில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு என்றைக்கோ வந்திருக்க வேண்டிய தீர்ப்புதான். ஆனால் இத்தனை காலமாக தள்ளிப் போய் வந்துள்ளது.
ராஜீவ் படுகொலைக்குப் பின்னர்
1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலையான பின்னணியில் நடந்த தேர்தலில் அனுதாப அலை வீசி அதன் மூலம் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்த அதிமுக, 225 தொகுதிகளில் வென்றது, முதல் முறையாக ஜெயலலிதா முதல்வரானார்.
புரட்சித் தலைவி
அதுவரை எம்.ஜி.ஆரை. மட்டுமே முதல்வராகப் பார்த்து பூரித்திருந்த அதிமுகவினருக்கு அடுத்த எம்.ஜி.ஆர். போல தோன்றினார் ஜெயலலிதா. புரட்சித் தலைவரின் ஒரே வாரிசு தான் தான் என்பதை நிரூபித்து தொண்டர்களின் புரட்சித் தலைவி ஆனார்.
முதல் பெண் முதல்வர்
தமிழகத்தின் முதல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் முதல்வர், இளம் வயது முதல்வர் என்ற பெருமைகளும் ஜெயலலிதாவுக்கு வந்து சேர்ந்தது.
5 ஆண்டு கால ஆட்சி
1991ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி முதல்வர் பதவியில் அமர்ந்த ஜெயலலிதா 1996ம் ஆண்டு மே 12ம் தேதி வரை அதில் நீடித்தார்.
அருமையான திட்டங்கள்
இந்த ஆட்சியின் ஆரம்ப காலங்கள் உண்மையிலேயே அருமையானதாக இருந்தது என்பது அவரதை எதிரிகளே கூட ஒப்புக் கொள்வார்கள். பல புரட்சித் திட்டங்கள இந்தக் காலத்தில் அவர் கொண்டு வந்தார்.
தொட்டில் குழந்தைத் திட்டம்
தொட்டில் குழந்தைத் திட்டம் அதில் ஒன்று. பெண் சிசுக்களைக் கொல்வதையும், அனாதரவாக விடுவதையும் தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த தொட்டில் குழந்தைத் திட்டத்திற்கு ஐ.நா. சபையும் கூட பாராட்டு தெரிவித்தது.
அனைத்து மகளிர் காவல் நிலையம்
அதேபோல இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையங்களையும் கொண்டு வந்தது ஜெயலலிதாதான். இதுவும் கூட அவரது முதல் ஆட்சியின் தொடக்க காலத்தில் நடந்த சில நல்ல விஷயங்களில் ஒன்றாகும்.
மகளிருக்கு போலீஸில் இட ஒதுக்கீடு
போலீஸில் 30 சதவீத இட ஒதுக்கீட்டை மகளிருக்கு அறிமுகப்படுத்தினார் ஜெயலலிதா. இதன் மூலம் பெண்கள் அதிக அளவில் காவல்துறையில் இணைய முடிந்தது.
சசி கும்பலின் அட்டகாசம்
ஆனால் அவரது முதல் ஆட்சியின் கடைசிக்கட்டத்தில்தான் சசிகலா கும்பலின் அட்டகாசம் பெருகி கடைசியில் அவர் ஆட்சியை விட்டு இறங்கியபோது பெரும் அவப்பெயருடன் வெளியேறும் நிலைக்கு ஆளானார். இப்போது கிட்டத்தட்ட அரசியலை விட்டு இறங்கிப் போகும் அளவுக்கு நிலைமை போய் விட்டது.
இதுவரை போட்டியிட்ட தேர்தல்கள்
ஜெயலலிதா முதல் முறையாக 1989ம் ஆண்டு போடிநாயக்கனூர் தொகுதியில் இரட்டை சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். அடுத்து 1991ம் ஆண்டு பர்கூர், காங்கேயம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றார்.
1996ம் ஆண்டு பர்கூரில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2001ம் ஆண்டு ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
2002ம் ஆண்டு ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வென்றார். 2006ல் மீண்டும் அதே ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டார். 2011ம் ஆண்டு தனது பூர்வீகமான ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டு வென்றார்.