ஆர்.கே.நகரில் வென்றார் ஜெயலலிதா.. மறைந்தார் சுலோச்சனா சம்பத்
சென்னை: ஜூன் மாத தமிழக முக்கிய நிகழ்வு, முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பெற்ற வெற்றிதான். ஒத்தைத் தொகுதிக்காக மொத்த அமைச்சர்களையும் களம் இறக்கி வேலை பார்த்து அத்தனை பேரின் டெபாசிட்டுகளையும் பறித்து வெற்றி பெற்றார் ஜெயலலிதா.
மறைந்த ஈவிகேஎஸ் சம்பத்தின் மனைவியும், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் தாயாரும், அதிமுக அமைப்புச் செயலாளருமாக இருந்தவருமான சுலோச்சனா சம்பத் இந்த மாதத்தில்தான் மறைந்தார்.
டூவீலரில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அதிரடி தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இந்த மாதம்தான் பிறப்பித்தது.
மேகி நூடுல்ஸ்.. அமிதாப், மாதுரி மீது வழக்கு
ஜூன் 2ம் தேதி மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், ப்ரீத்தி ஜிந்தா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குத் தொடர பீகார் கோர்ட் உத்தரவிட்டது.
ஜெ. வேட்பு மனு தாக்கல்
ஜூன் 5ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்தியாவில் மாகி நூடுல்ஸுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைத்துக் கடைகளிலிருந்து மேகி திரும்பப் பெறப்பட்டது.
சுலோச்சனா சம்பத் மரணம்
ஜூன் 6ம் தேதி அதிமுக அமைப்புச் செயலாளரும், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் தாயாருமான சுலோச்சனா சம்பத் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.
அம்பேத்கர் - பெரியார் வட்டம்
ஜூன் 7ம் தேதி சென்னை ஐஐடியில் அம்பேத்கர் - பெரியார் வட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
கட்டாய ஹெல்மெட்
இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை ஜூன் 8ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது.
கடலோரக் காவல் படை விமானம் மாயம்
ஜூன் 9ம் தேதி கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் நாகை - சென்னை இடையே மாயமானது. பின்னர் அது விழுந்து விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது.
செம்மரக் கடத்தல் டிஎஸ்பி கைது
செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக டிஎஸ்பி தங்கவேல் என்பவர் ஜூன் 10ம் தேதி கைது செய்யப்பட்டார்.
சரிதா நாயருக்கு சிறை
ஜூன் 18ம் தேதி சோலார் பேனல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சரிதா நாயர் உள்ளிட்ட இருவருக்கு தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கேரள கோர்ட் உத்தரவிட்டது.
சர்வதேச யோகா தினம்
ஜூன் 21ம் தேதியன்று முதலாவது சர்வதேச யோகா தினம் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டது.
ஒரு பெண்ணால் மூண்ட கலவரம்
ஜூன் 26ம் தேதி, வேலூர் மாவட்டம் ஆம்பூரில், பவித்ரா என்ற பெண் காணாமல் போனது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே பெரும் கலவரம் மூண்டது. கோடிக்கணக்கில் இதில் பொருட் சேதம் ஏற்பட்டது.
ஜெயலலிதா வெற்றி
ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 30ம் தேதி எண்ணப்பட்டன. முதல்வர் ஜெயலலிதா 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட அத்தனை பேரும் டெபாசிட்டை இழந்தனர்.