சேலத்தில் ஜெயலலிதா இன்று பிரசாரம்: 16 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார் !
சேலம்: சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 16 வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா சேலத்தில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

சேலம் மாவட்டத்தில் சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூர், வீரபாண்டி, எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஏற்காடு (தனி), ஆத்தூர் (தனி), கெங்கவல்லி (தனி) ஆகிய 11 தொகுதி வேட்பாளர்கள், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாமக்கல், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), பரமத்திவேலூர், திருச்செங்கோடு ஆகிய 5 தொகுதி வேட்பாளர்கள் என 16 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்கிறார்.
இதற்காக சேலத்தை அடுத்த மகுடஞ்சாவடி காளிகவுண்டன்பாளையம் கிராமத்துக்கு உள்பட்ட கூத்தாடிபாளையம் பகுதியில் 24 ஏக்கர் பரப்பளவு உள்ள பகுதியில் தேர்தல் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல, மேடை அருகே ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்து தரையிறங்க இறங்கு தள வசதியும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பிரசாரக் கூட்டத்துக்கு வரும் தொண்டர்களுக்கு ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்து சுமார் 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர், சேலம் சரக டி.ஐ.ஜி. நாகராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுப்புலட்சுமி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டனர்.












Click it and Unblock the Notifications