அம்மாவே ஜெயில்ல இருக்காங்க… கோயம்பேடு சந்தையில் மந்தமான ஆயுத பூஜை விற்பனை
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ஏராளமானோர் கறுப்பு பேட்ச் அணிந்தும், கறுப்பு உடையணிந்தும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சிலர் துக்கதினமே அனுஷ்டிங்கின்றனர்.
அதனால் ஆயுதபூஜை கொண்டாட்டங்களே ஆர்பாட்டங்கள் இன்றி அமைதியாக நடைபெற்று வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுதபூஜையையொட்டி நடைபெற்று வரும் சிறப்பு சந்தையில் பூஜை பொருட்களின் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் வியாபாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
பூஜை சிறப்பு விற்பனை
ஆயுதபூஜையை முன்னிட்டு பூஜைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக ஆண்டுதோறும் கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கோயம்பேடு பூ மார்க்கெட் பின்புறம் இடம் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு சந்தை நடத்தப்பட்டு வருகிறது.
பூக்கள், பழங்கள், பொரி
இந்த சிறப்பு சந்தையில் 600-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், ஆயுத பூஜைக்கு தேவைப்படும் பூஜை பொருட்களான, வாழைக் கன்று, பூசணிக்காய், பொரி உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர்.
உற்சாகமிழந்த அதிமுகவினர்
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து, பெரும்பாலான அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை உற்சாகமாக கொண்டாடப்படவில்லை. பொதுமக்கள் மத்தியிலும் ஆயுத பூஜை உற்சாகம் குறைவாகவே உள்ளது.
விற்பனை மந்தம்
இதனால் இந்த ஆண்டு ஆயுத பூஜை சிறப்புச் சந்தையில் பூஜை பொருட்களின் விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
விற்காத பொரி மூட்டைகள்
கடந்த ஆண்டு ஆயுத பூஜையின்போது சிறப்பு சந்தையில் நிற்கக்கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் இருந்தது. நான் கடந்த ஆண்டு 150 பொரி மூட்டைகளை கொண்டு வந்தேன். ஆயுத பூஜைக்கு ஒரு நாள் முன்னதாகவே அனைத்தும் விற்று தீர்ந்தன. இந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு ஒரு நாளே உள்ள நிலையில் இன்னும் 10 மூட்டை பொரி கூட விற்பனையாகவில்லை என்று பொரி விற்பனையாளர் கூறியுள்ளார்.
நஷ்டமடைந்த வியாபாரிகள்
சிறப்பு சந்தையில் பொருட்களை விற்க நாளொன்றுக்கு ரூ.1000 செலுத்துகிறோம். பொருட்களை ஏற்றி வர லாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை வாடகை கொடுத்திருக்கிறோம். இந்த ஆண்டு எங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படும்" என்றும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.