வருமான வரி வழக்கில் ஜெ. சமரசம் ஏற்கப்படுமா? டிச.11க்கு விசாரணை ஒத்திவைப்பு
சென்னை: வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக அபராதம் செலுத்திவிட்டதால், வருமானவரித்துறையின் இறுதி உத்தரவு வரும் வரை நீதிமன்றம் இந்த வழக்கை தொடரக்கூடாது என்று ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை டிசம்பர் 11ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது..
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் கடந்த 1993-1994-ஆம் ஆண்டுக்குரிய வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.
இதேபோல், இருவரும் பங்குதாரர்களாக இருந்த சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம், கடந்த 1991-1992, 1992-1993 ஆகிய நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்றும் புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதும், சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மீதும் வருமான வரித் துறை 1996, 1997-ஆம் ஆண்டுகளில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எழும்பூர் சென்னை பெருநகரக் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, வழக்கில் சமரசம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து வருமான வரித்துறையிடம் ஜெயலலிதா, சசிகலா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். பின்னர், அந்த மனுவை ஏற்றுக்கொண்டு வரி செலுத்தாத காலத்துக்கு அபராதத் தொகை செலுத்துமாறு வருமான வரித் துறை உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் 27ம்தேதி ரூ.2 கோடியை அபராதமாக செலுத்தியுள்ளது குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா தரப்பு.
வருமான வரித்துறையிடம் அபராதம் செலுத்தியதால் வழக்கை சமரசம் செய்து கொள்ள ஜெயலலிதா மற்றும் சசிகலா வருமான வரித்துறையிடம் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனிடையே வரி ஏய்ப்பு வழக்கு விசாரணை இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா சார்பில் மூத்த வக்கீல் பி.குமார், மணிசங்கர், அசோகன், பன்னீர்செல்வம், கருப்பையா, பரணிகுமார் ஆகியோர் ஆஜராகி ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அதேபோல், சசிகலா சார்பில் வக்கீல் செந்தில், திவாகர், செல்வகுமார், திருச்சி ஜெயராமன், சிவகங்கை சுந்தரபாண்டியன், தனஞ்செயன் ஆகியோர் ஆஜராகி ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:
வருமானவரி கட்டாதது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வருமானவரி கட்டாத காலத்துக்கான வருமான வரி, அபராதத் தொகை ஆகியவற்றை வருமானவரித்துறை குழுவிடம் கட்டிவிட்டோம். அதனால் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தேவையில்லை. வருமானவரித்துறையின் இறுதி உத்தரவு வரும் வரை நீதிமன்றம் இந்த வழக்கை தொடரக்கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வருமானவரித்துறை மூத்த வக்கீல் ராமசாமியிடமும் இந்த மனு தரப்பட்டது. இந்நிலையில், நீதிபதி தட்சிணாமூர்த்தி விடுமுறை என்பதால் இந்த மனுக்கள் 3வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று மதியம் 3 மணிக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கயல்விழி, விசாரணையை வரும் 11ம்தேதிக்கு ஒத்தி வைத்தார்.
ரூ.2 கோடி அபராத தொகை ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ.30 லட்சத்து 83ஆயிரத்து 887 ஆகும். அதேபோன்று சசிகலாவுக்கு ரூ.28 லட்சத்து 7 ஆயிரத்து 972 , சசி எண்டர் பிரைசஸ் தொடர்பாக 2 வழக்குகளில் ஒரு வழக்கில் ரூ.65 லட்சத்து 67 ஆயிரத்து 872, இன்னொரு வழக்கில் ரூ.75 லட்சத்து 33 ஆயிரத்து 330 அபராதம் விதிக்கப்பட்டது. வரி மற்றும் தண்ட தொகை சேர்த்து மொத்தம் சுமார் ரூ.2 கோடி விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.