ஜெயலலிதாவின் வாரிசு அம்ருத்தாதான்... அடித்து சொல்கிறார் அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர்
ஜெயலலிதாவின் வாரிசு அம்ருத்தாதான் என்று அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஜெயலலிதாவின் வாரிசு பெங்களூரைச் சேர்ந்த அம்ருத்தா என்று அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார். மேலும் இதை அவர் விரைவில் டிஎன்ஏ சோதனை மூலம் நிரூபிப்பார் என்றும் சங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஜெயலலிதாதான் தனது தாய் என்று பெங்களூரை சேர்ந்த அம்ருத்தா உரிமை கொண்டாடி உச்ச நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர அம்ருத்தாவை அறிவுறுத்தியுள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் சிகிச்சை கொடுத்ததால் தனக்கு எந்த வகையிலாவது உதவுவார் என்பதால் அவரை அம்ருத்தா அண்மையில் சந்தித்துள்ளார்.

லிக்விட் ஆக்ஸிஜன்
இதுகுறித்து சன் நியூஸ் தொலைகாட்சியில் அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் கூறுகையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை கொடுத்த 20 நாட்களும் நான் எந்த பணத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட லிக்விட் ஆக்ஸிஜன் (திரவ ஆக்ஸிஜன்) அவருக்கு கொடுத்தேன். அதை தண்ணீரில் கலந்து குடித்தால்போதும் உடல் சோர்வில்லாமல் இருக்கும். இவை அனைத்துக்குமான கட்டணத்தை அடுத்த முறை அழைக்கும்போது வழங்குவதாக தெரிவித்தனர்.

அழைப்பில்லை
ஆனால் அடுத்த முறை என்னை அழைக்கவே இல்லை. அந்த கட்டணத்தை அவரது வாரிசான அம்ருத்தாவிடம் பெற்றுக் கொள்ளலாம் என இருக்கிறேன் என்று கூறி அதிர்ச்சி கொடுத்த சங்கர் தொடர்கையில் , உறுதியாக அம்ருத்தாதான் ஜெயலலிதாவின் வாரிசு. அம்ருத்தாவுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துள்ளனர். அது ஜெயலலிதாவின் டிஎன்ஏவுடன் ஒத்துபோகும்.

அம்ருத்தாவுக்கும் ஜெ.வின் உடல் உபாதைகள்
என்னை சந்திக்க வந்த அம்ருத்தாவின் நாடியை பிடித்து பார்த்தபோது ஜெயலலிதாவின் நாடியை பிடித்து பார்த்த உணர்வு எனக்கு ஏற்பட்டது. ஸ்டீராய்டு பிரச்சினைகளை தவிர்த்து ஜெயலலிதாவுக்கு இருந்த நோய் அனைத்தும் அம்ருத்தாவுக்கும் இருந்தது.

கை அமைப்பு
இருவரின் உணவு பழக்கமும், லைப் ஸ்டைல், கை அமைப்பு ஆகியன அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தன. 28 ஆண்டுகளாக ஜெயலலிதாதான் அவரது அம்மா என்று தெரியாமல் இருந்திருக்கிறார். தற்போது உண்மை தெரிந்தவுடன் அவர் வெளியே வந்துள்ளார். டிஎன்ஏ சோதனை முடிவுகளுக்கு பிறகு, அம்ருத்தா நிச்சயமாக உரிமையுடன் போயஸ் கார்டனில் இருப்பார் என்றார் டாக்டர் சங்கர்.












Click it and Unblock the Notifications