ஜெ. சுயநினைவோடுதான் கைரேகை வைத்தார்.. விசாரணை ஆணையம் அறிக்கை
தமிழகத்தில் 3 தொகுதி தேர்தலுக்கான வேட்புமனுவில் கைரேகை பெறும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்யும் ஆணையம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
சென்னை: தமிழகத்தில் 3 தொகுதி தேர்தலுக்கான வேட்புமனுவில் கைரேகை பெறும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்யும் ஆணையம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாள்கள் அங்கு சிகிச்சை மேற்கொண்ட அவர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்துவிட்டார்.இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது தமிழ்நாட்டில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை இடம் பெற்றிருந்தது.
இதுகுறித்து தற்போது விசாரிக்கப்பட்டது.கைரேகை பெறும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக, மருத்துவர் பாலாஜி வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது இது உண்மைதான் என்று விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''கைரேகை பெறும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தார்.அப்போலோ அறையில் வைத்து ஜெயலலிதா கைரேகை பெறப்பட்டது உண்மைதான். கைரேகை பெறப்பட்டபின் ஜெயலலிதா விரலில் இருந்த மையை பாலாஜி அழிக்க முயன்றார், அவரை தடுத்து சசிகலா மையை அழித்து எடுத்தார்'' என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் ''சசிகாலா கேட்டுக்கொண்டதன் பேரில் பூங்குன்றன் என்பவரை மருத்துவர் அழைத்து வந்தார். அவர்தான் கைரேகையை பெற்றது'' என்று ஆணையம் கூறியுள்ளது.