நீங்கள்தான் என் மூச்சுக்காற்று... ஆர்.கே.நகரில் ஜெ. "டச்சிங்" பேச்சு!
சென்னை: என் மீது உங்களுக்கு நம்பிக்கை... உங்கள் மீது எனக்கு அளவில்லாத நம்பிக்கை... நீங்கள்தான் என் மூச்சுக்காற்று... உங்களுக்கு சேவை செய்ய எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று ஆர்.கே. நகர் தொகுதி மக்களிடம் சென்டிமெண்ட் ஆக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார் முதல்வர் ஜெயலலிதா.
சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா, வேன் மூலம் இன்று வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். இன்று மாலை எம்.ஜி.ஆர். சிலை - பெட்ரோல் பங்க் அருகே பிரச்சாரத்தை தொடங்கினார் ஜெயலலிதா. வேன் மூலம் ஆர்.கே. நகரில் வலம் வந்த ஜெயலலிதாவை பூக்களை தூவி அதிமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
வாக்காளர்கள் மத்தியில் பேசிய ஜெயலலிதா, அதிமுகவின் சாதனைகளை தெரிவித்தார். சட்டசபை தேர்தலுக்காக அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை பட்டியலிட்டார்.

இடைத்தேர்தலில் வெற்றி
என் அன்பான உடன்பிறப்புக்களே! கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் எனக்கு வாக்களித்து மகத்தான வெற்றி பெற வைத்தீர்கள். ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் என் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கிறீர்கள். சட்டசபை தேர்தலில் நான் மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று கூறினார்.

மகத்தான வெற்றி
இடைத்தேர்தலில் உங்கள் பேராதரவுடன் எனக்கு மகத்தான வெற்றி கிடைத்தது. வரும் சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கச் செய்ய வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் நலத்திட்டங்கள் தொடரும். இன்னும் ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மீனவர்களுக்கு உதவி
மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு உதவித்தொகை ரூ. 5000 ஆக உயர்த்தப்படும். மீனவர்களுக்கு என தனி வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும். 100 யூனிட்டிற்கு மின் கட்டணம் வசூலிக்கப்படாது.

ஆவின் பால் விலை குறைப்பு
அரசு கேபிள் டிவிக்கு செட் டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படும். ஆவின்பால் ஒரு லிட்டர் 21ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்
அம்மா பேங்கிங் கார்ட் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மாணவர்களுக்கு லேப் டாப் உடன் இலவச இணைய வசதி அளிக்கப்படும் என்று ஜெயலலிதா கூறினார்.

என் மூச்சுக்காற்று
மக்களால் நான் மக்களுக்காக நான்...என் மீது உங்களுக்கு நம்பிக்கை... உங்கள் மீது என் மீது அளவில்லாத நம்பிக்கை
இடைத்தேர்தலில் என்னை மகத்தான அளவில் வெற்றி பெற வைத்தீர்கள். தேபோல பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறச் செய்யுங்கள். நீங்கள்தான் என் மூச்சுக்காற்று... உங்களுக்கு மீண்டும் சேவை செய்ய எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்று ஜெயலலிதா கூறினார்.












Click it and Unblock the Notifications