உணர்ச்சிவசப்படாதீர்கள், உயிரை மாய்க்காதீர்கள்... தீர்ப்பு நெருங்கும் நேரத்தில் ஜெ. அறிக்கை!
சென்னை: உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக இருங்கள் என்று அ.தி.மு.க. தொண்டர்களிடம் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''என் மீது பேரன்பு கொண்டு பல்வேறு தியாகங்களை தொடர்ந்து செய்து வரும் தொண்டர்கள், அவ்வப்போது ஒரு சில இடங்களில் எனக்கு பெரிதும் மன வருத்தம் தருகின்ற வகையில் தங்கள் இன்னுயிரையே மாய்த்துக்கொள்ளும் செயல்களிலும் ஈடுபட்டு விடுகின்றனர்.

அண்மையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி 8வது வார்டை சேர்ந்த இளைஞர் பாசறை உறுப்பினர் ஆர்.கார்த்திக் தூக்கில் தொங்கி தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரம் அடைந்தேன். என் உயிரினும் மேலான தொண்டர்கள் உணர்ச்சி வசப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
கார்த்திக்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் அவரது குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் குடும்ப நல உதவியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறி உள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தைச் சேர்ந்த பி.தமிழ்மணி, விஷம் அருந்தியும், வேலூர் கிழக்கு மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த எஸ்.நரசிம்மன் மாரடைப்பு காரணமாகவும் மரணம் அடைந்து விட்டனர் அவர்களின் குடும்பங்களுக்கும் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்து ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications