மருத்துவ படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்த எதிர்ப்பு.. பிரதமருக்கு முதல்வர் ஜெ. கடிதம்
சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்தல் நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா அனுப்பியுள்ள கடிதம்:
மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்கான படிப்புக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்துவதை தமிழக அரசு எதிர்த்து வருவது உங்களுக்கு நினைவிருக்கலாம். இது குறித்து நான் அப்போதைய பிரதமருக்கு 30-7-2011, 7-9-2012 மற்றும் 30-9-2012 ஆகிய தேதிகளில் கடிதம் எழுதி உள்ளேன். இந்த பிரச்சனையை நாங்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கும் கொண்டு சென்றோம்.

சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கில் 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந்தேதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வெளியிட்டது. தமிழக மாணவர்களின் நலனை பாதிக்காத இந்த தீர்ப்புக்கு பரவலான வரவேற்பு கிடைத்தது.
என்றாலும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு மத்திய அரசு பணியவில்லை. சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவை வாபஸ் பெறக்கோரி நான் அப்போதைய பிரதமருக்கு 28-7-2013 அன்று கடிதம் எழுதினேன். 3-6-2014 அன்று உங்களிடம் நான் கொடுத்த மனுவில் இது பற்றி குறிப்பிட்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் மத்திய அரசின் இந்திய மருத்துவக் கழகம் நாடெங்கும் மருத்துவப்படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்த பரிந்துரைகள் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த பரிந்துரையை மத்திய அரசு பரிசீலினை செய்வதாகவும் ஆச்சரியமூட்டும் வகையில் பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டு மாணவர்கள் மத்தியில் இது குழப்பத்தை உருவாக்கும். தமிழ்நாட்டில் மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளுக்கு வெளிப்படையான தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
2005-ம் ஆண்டில் இருந்து எனது தலைமையிலான அரசு மிகவும் கவனமாக பரிசீலினை செய்த பிறகே தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்தது. பொது நுழைவுத்தேர்வு முறையால் கிராமப்புற ஏழை மாணவ-மாணவிகள், மற்றும் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அதை எதிர்த்து எனது தலைமையிலான அரசு உறுதியான முடிவை எடுத்தது.
பொது நுழைவுத்தேர்வு நகர்ப்புறத்தில் இருப்பவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது போன்றது. கிராமப் பகுதி மாணவர்கள் உரிய பயிற்சி பெற முடியாத நிலையில் இருப்பதால் பொது நுழைவு தேர்வு அவர்களுக்கு பாதகமானது.
பொது நுழைவுத் தேர்வை அகற்றியதன் மூலம் ஏராளமான சமூக-பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்கள் பயன் அடைந்தனர்.
மருத்துவ உயர்படிப்பை பொருத்தவரை ஊரகப் பகுதிகளில் குறிப்பிட்ட காலம் டாக்டர்கள் பணிபுரிய வேண்டும் என்று தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது. இதன் மூலம் கிராமப் பகுதிகளுக்கு தேவையான மருத்துவத்தேவை பூர்த்தி செய்ய உதவியாக உள்ளது.
இந்த நிலையில் மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு திட்டத்தை அமல்படுத்தினால், அது மாநிலத்தின் கொள்கை திட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இது மாநில அரசின் உரிமையில் தலையிடுவது போல் உள்ளது.
எனவே மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த முயற்சிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications