சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு: சுப்ரமணியசுவாமி படத்தை செருப்பால் அடித்த அதிமுகவினர்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட உள்ளது. நேரம் செல்ல செல்ல அதிமுகவினர் கொதிப்படைந்துள்ளனர். வழக்கின் காரணகர்த்தாவான சுப்ரமணியசுவாமியின் படத்தை செருப்பால் அடித்து ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு அறிவிக்கும் வரை திக் திக் நிமிடங்களாக நகர்ந்து வருகிறது.
கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரையில் முதலமைச்சர் பதவியில் இருந்த ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி, 1996ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
J Jayalalithaa DA case : Protest against Subramanian Swamy in Chennai pic.twitter.com/b7VntoFwQK
— ANI (@ANI_news) September 27, 2014
அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இந்நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, பரப்பன அக்ரஹாரம் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை வெளியிடுகிறார்.
இதற்காக, சென்னையில் இருந்து பெங்களூருவின் பரப்பன அக்ரஹாரம் நீதிமன்றத்திற்கு சென்றுள்ள ஜெயலலிதாவுக்கு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பரப்பன அக்ரஹாராவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் 48 மணி நேரத்திற்கு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தீர்ப்பு காலை 11 மணிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் 1 மணி என கூறப்பட்டது. நேரம் செல்லச் செல்ல அதிமுகவினர் மத்தியில் ஒருவித அசாதாரணமான சூழ்நிலை நிலவி வருகிறது.
சென்னையில் விரக்தி மனநிலையில் காணப்படும் அதிமுகவினர் சுப்ரமணிசுவாமியின் உருவப்படத்தை செருப்பால் அடித்தனர். சுப்ரமணியசுவாமிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் பல்வேறு முழக்கங்களையும் எழுப்பினர்.