மனோரமாவுடன் நடித்த அனுபவங்கள் நினைவில் பசுமையாக உள்ளது... ஜெயலலிதா இரங்கல்
சென்னை: நடிகை மனோரமாவின் மறைவு தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு என தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை புரிந்தவர் நடிகை மனோரமா. தமிழ் சினிமாவில் என்றென்றும் தனக்கென தனி முத்திரை படைத்து, அனைவராலும் ஆச்சி என செல்லமாக அழைக்கப்பட்ட இவர், நேற்றிரவு மாரடைப்பால் காலமானார்.
சென்னை தி.நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக மனோரமாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மனோரமாவின் இழப்பிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மனோரமாவின் மரணம் குறித்து கேள்விப்பட்டு மன வேதனை அடைந்தேன். மனோரமாவின் மறைவு, தமிழ்த்திரைப்படத்துறைக்கு பெரும் இழப்பு. அவரது இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவருடன் நடித்த அனுபவங்கள் மனதில் பசுமையாக உள்ளது' என இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மனோரமாவுடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் ஜெயலலிதா. கலாட்டா கல்யாணம் உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து அசத்தியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.