ஆர்.கே.நகர்... சசிகலாவுடன் வந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் ஜெ
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா இன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதாவுக்கு வழிநெடுகிலும் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 27-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. சார்பில் முதல்வர் ஜெயலலிதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் உள்ளிட்ட பிரதான எதிர்கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளரை நிறுத்துகிறது.
பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளும் ஓரிரு நாளில் தங்கள் முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளன. ஆர்.கே.நகர் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் கடந்த 3-ந்தேதி தொடங்கியது.
இந்த நிலையில் இன்று அ.தி.மு.க. வேட்பாளரான முதல்வர் ஜெயலலிதா, தண்டையார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகம் 4-ல் உள்ள தேர்தல் அதிகாரி சவுரிராஜனிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
அதன் பின்னர் அங்கே கூடியிருந்த அ.தி.மு.க. தொண்டர்களைப் பார்த்தை கையசைத்துவிட்டு ஜெயலலிதா புறப்பட்டார். ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலாவும் வந்திருந்தார்.
ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கலின் போது நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், வெங்கடேஷ்பாபு எம்.பி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
முன்னதாக வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதாவுக்கு வழிநெடுகிலும் அண்ணா தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.