ஜெயலலிதா உடல் நல்லடக்கம்.. முன்வரிசையில் நடராஜன்.. 8-வது வரிசையில் ராகுல் !
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மறைந்த ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு அருகில் முழு அரசு மரியாதைகளுடன் நேற்று மாலை 6.05 மணிக்கு சந்தனப் பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக ராஜாஜி அரங்கில் ஜெயலலிதா உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போது ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலின் படிக்கட்டுகளில் வரிசையாக உட்கார்ந்திருந்தனர். ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் உள்ளிட்ட அவருக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே ஜெயலலிதாவின் உடலை சுற்றி பாதுகாப்பு அரணாக இருந்தனர்.
இந்தநிலையில் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது விவிஐபிக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அரசு மரபுகள் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் வி.வி.ஐ.பி.களுக்காக போடப்பட்ட பந்தல் இருக்கையில் 8-வது வரிசையில் உட்கார வைக்கப்பட்டார் ராகுல்காந்தி. ஆனால், எந்த ஒரு அரசு பதிவிலும் இல்லாத சசிகலா கணவர் நடராஜன் முன் வரிசையில் உட்கார வைக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர், மிகப்பெரிய அரசியல் பாரம்பரிய மிக்க குடும்பத்தின் வாரிசு, ஜெயலலிதாவின் மீது உளமறிய அன்பு வைத்திருப்பவர் ராகுல்காந்தி, அவருடன் வந்த மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத், நாடாளுமன்ற மாநிலங்களவையின் எதிர்கட்சித்தலைவர். கேபினெட் ரேங்கில் இருப்பவர். அவரும் 8வது வரிசையிலே உட்கார வைக்கப்பட்டார்.
இதைக்கண்டு அதிமுக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன், அதிகாரிகளிடம் சத்தம் போட, அதன் பிறகே முன் வரிசைக்கு ராகுலும், குலாம் நபி ஆசாத்தும் கொண்டு வரப்பட்டார்கள். இப்படி நிறைய ப்ரோட்டோகால் குளறுபடிகள் ஜெயலலிதாவின் நல்லடக்க நிகழ்வின் போது நடந்துள்ளது. இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் ஓ.பி.எஸ்.அரசு மீதி கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.