அறிவாற்றல் துறையின் தலைநகராக தமிழகம் மாறி வருகிறது: ஜெயலலிதா
சென்னை: இந்தியாவின் அறிவுசார் தலைநகரமாக அண்ணா பல்கலைக்கழகம் திகழ்கிறது என்றால் மிகையாகாது. அறிவாற்றல் துறையில் தலைநகரமாக தமிழகம் மாறி வருகிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு பல்கலைக் கழக வேந்தரும், கவர்னருமான ரோசைய்யா தலைமை தாங்கி பட்டங்களை வழங்கினார். முதல்வர் ஜெயலலிதா தலைமை விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தில் 34-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசுவதில் பெருமை அடைகிறேன்.
சக்திமிக்க பட்டதாரிகள், இளைஞர்கள் ஆகியோரை காணும் போதெல்லாம் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

உங்களது படிப்பு மற்றும் ஆற்றலை மாற்றும் தருணம் இது. பல்கலைக்கழகத்தில் படிக்கும் நாட்களில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியான நாட்களாக கழித்து இருப்பீர்கள்.
படிப்பை முடித்துள்ள நீங்கள் கற்ற கல்வியை சமுதாயத்துக்கு பயன்படும் வகையில் மாற்ற வேண்டும். நீங்கள் பெற்ற கல்வி உங்களது பெற்றோரின் தன்னலமற்ற தியாகத்தால் கிடைத்தது என்பதை உணர வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் புதிய கண்டுபிடிப்புகள், புதிய கருத்துக்களின் மையமாக திகழ்கிறது. இதன் மூலம் அறிவாற்றலை நீங்கள் பெற்று இருக்கிறீர்கள்.
அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் பெருமைமிக அடையாளமாக திகழ்கிறது. அத்தகைய கல்வி நிறுவனத்திடம் இருந்து நீங்கள் பட்டம் பெற்று இருக்கிறீர்கள்.
1794-ம் ஆண்டு இந்த பல்கலைக்கழகம் சர்வே ஸ்கூல் என்ற பெயரில் தோன்றியது. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் மிகச் சிறந்த பயிற்சி பள்ளிகளில் ஒன்றாக திகழ்ந்தது.
1858-ம் ஆண்டு இதன் பெயர் சிவில் இன்ஜினீயர் ஸ்கூல் என்று மாறியது. இதன் மூலம் நாட்டிலேயே மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பில் பட்டம் வழங்கும் முதல் கல்வி நிறுவனமாக இந்த கல்லூரி பெயர் பெற்றது.
1920-ம் ஆண்டு இப்போது கிண்டியில் உள்ள இந்த வளாகத்துக்கு இந்த கல்லூரி இடம் பெயர்ந்தது. 1932-ம் ஆண்டு இந்தியாவிலேயே எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் முதல் முதலாக பட்டம் வழங்குவதை தொடங்கியது.
டெலிகம்யூனிகேசன், நெடுஞ்சாலை என்ஜினீயரிங் ஆகியவற்றிலும் முதன் முதலாக இந்த பல்கலைக் கழகம்தான் பட்டம் வழங்கியது.
1978-ம் ஆண்டு இந்த கல்வி நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகமாக மாறியது. 2001-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 250 பொறியியல் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. 2012-ம் ஆண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாறியது. இதன் கீழ் 637 கல்வி நிறுவனங்கள் உள்ளன.
இதை ஒருங்கிணைக்க தமிழ்நாட்டில் 4 மண்டலங்களில் இந்த பல்கலைக்கழகம் நிர்வாக ரீதியாக செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த பல்கலைக்கழகம் ஆய்வு பணிகளிலும் எலக்ரானிக்ஸ், கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி.. ஏரோநாட் டிக் என்ஜினீயரிங், பையோடெக்னாலஜி உள்பட பல பிரிவுகளில் முதன்மை பெற்றுள்ளது.
அண்ணா பல்கலைக் கழகம் ஒன்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கையை சிறப்பாக நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 1.85 லட்சம் பேர் சேர்க்கப்படுகிறார்கள்.
நீங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து கவுரமிக்க பட்டம் பெற்று இருக்கிறீர்கள். நாட்டில் புதுமைகள் கொண்டு வருவதாக அண்ணா பல் கலைக்கழகம் விளங்குகிறது.
இந்தியாவின் அறிவுசார் தலைநகரமாக அண்ணா பல்கலைக்கழகம் திகழ்கிறது என்றால் மிகையாகாது. அறிவாற்றல் துறையில் தலைநகரமாக தமிழகம் மாறி வருகிறது. இத்தகைய பல்கலைக்கழகத்தில் படித்த உங்களுக்கு சமுதாய கடமை உள்ளது. நீங்கள் பெற்ற கல்வியை சமுதாயத்துக்கு பயன்படும் வகையில் பயன்படுத்த வேண்டும்.
2013-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் உள் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ. 150 கோடி வழங்கப்பட்டது. இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் மிகவும் பயன் அடைந்து வருகிறார்கள்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
விழாவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த 1 லட்சத்து 56 ஆயிரத்து 289 பேர் பட்டம் பெற்றனர். இதில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 494 பேர் இளநிலைப்பட்டங்களும், 35,044 பேர் முதுநிலைப்பட்டங்களும் பெற்றனர்.
690 பேருக்கு பி.எச்.டி. பட்டமும், 61 பேருக்கு எம்.பில் பட்டங்களும் வழங்கப்பட்டது. இதில் பி.எச்.டி. பட்டம் பெற்ற 690 பேர்களுக்கும் பல்கலைக்கழக அளவில் முதல் ராங்க் பெற்ற 114 பேருக்கும் இன்றைய விழாவில் நேரடியாக பட்டம் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications