அரிசிக்கு வசூலித்த வரியை திருப்பி கொடுங்கள்: பிரதமருக்கு ஜெ., கடிதம்
இதுகுறித்து பிரதமருக்கு, அவர், எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
மத்திய நிதி அமைச்சகம், நியாயமற்ற முறையில், அரிசிக்கு, சேவை வரி விதித்துள்ளது. கடந்த, 2012ல், சேவை வரியில், மாற்றம் செய்யப்பட்டபோது, 'வேளாண் விளை பொருள்' என்ற அடிப்படையிலும், மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, சேவை வரி விலக்கில் இருந்து, அரிசி நீக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர், பொது வினியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரம் (தனி பொறுப்பு) அமைச்சகத்துக்கு, 2013 நவ., 8ம் தேதி அனுப்பிய கடிதத்தில், 'அரிசி, பருத்தி, வேளாண் விளை பொருட்கள், பட்டியலில் வராது' என, குறிப்பிட்டுள்ளார்.
கோதுமையை மட்டும், வேளாண் விளைபொருள் எனக் கூறி, மத்திய நிதியமைச்சர், மிகவும் வினோதமான நிலையை எடுத்திருக்கிறார். இது, தென் மாநில மற்றும் கிழக்கு மாநில மக்களுக்கு எதிராக உள்ளது. இந்த முடிவு, வெளி சந்தையில், அரிசி விலை உயர வழிவகுக்கும்; சாமானிய மக்களை, கடுமையாக பாதிக்கும். கடந்த, 2012 ஜூலையில் இருந்து கணக்கிட்டு, அரிசி மீது, சேவை வரி வசூலிப்பது, அரிசியை இருப்பு வைத்திருப்போருக்கும், சந்தைப்படுத்துவோருக்கும், மிகப்பெரிய சுமையாக மாறியுள்ளது. '
அரிசிக்கு, சேவை வரியில் இருந்து, விலக்கு அளிக்க வேண்டும்' என, தமிழக அரசு ஏற்கனவே, தெளிவான நிலையை எடுத்துள்ளது. எனவே, தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, அரிசியை, 'வேளாண் விளைபொருள்' என, அறிவிக்க வேண்டும்.
அரிசி சேமிப்பு மீதான, சேவை வரியை ரத்து செய்ய வேண்டும்; வசூலித்த வரி பணத்தை, திருப்பி கொடுக்க வேண்டும். இவ்வாறு, ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஏற்கனவே, பதப்படுத்தப்பட்ட பொருட்கள் மீது, சேவை வரி விதிக்கப்பட்ட போது, 'வேளாண் விளைப்பொருள்' என்ற அடிப்படையில், அரிசிக்கு, விலக்கு அளிக்கப்பட்டது.