ஜெ. மரணம் பற்றி சசிகலா பிரமாண பத்திரம்.. வெளிவராத பரபரப்பு தகவல்கள் இவைதான்!
Recommended Video
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ல் உடல்நலக்குறையால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, டிசம்பர் 5ம் தேதியன்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
அப்பல்லோவில் இருந்த 75 நாட்களும் யாரையுமே சசிகலா பார்க்க விடவில்லை என்றும் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து கிளர்ச்சி வெடித்தது.
இதையடுத்து, ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளார். இந்த கமிஷனில், ஜெயலலிதாவுடன் தொடர்பில் இருந்த பல தரப்பினரும் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதேபோல, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறையில் உள்ள சசிகலாவிடமும் விசாரணை நடத்த ஆறுமுகசாமி கமிஷன் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், சசிகலா நேரில் ஆஜராகாமல் தனது தரப்பு பதிலை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்துள்ளார். சசிகலா வாக்குமூலம் அடங்கிய பிரமாணப்பத்திரத்தை வழக்கறிஞர் அரவிந்த், விசாரணை ஆணையத்திடம் சீலிடப்பட்ட கவரில் அளித்தார்.
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் இவைதான்:
- சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு எப்படி வெளியாகுமோ என்ற மன அழுத்தத்தில் ஜெயலலிதா இருந்தார்.
- சொத்துகுவிப்பு வழக்கில், கர்நாடக தனி நீதிமன்றம் வழங்கிய தண்டனையால், பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோதே உடலும், மனதும் ஜெயலலிதாவுக்கு பாதிக்கப்பட்டது. இருப்பினும், 2016 சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்டார்.
- செப்டம்பர் 22ஆம் தேதி இரவு ஜெயலலிதா பாத்ரூமில் தவறி விழுந்தார். ஆனால், மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறலாம் என நான் கூறியபோதும் ஜெயலலிதா அதை ஏற்கவில்லை.
- அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியது உண்மைதான்.
- ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஓபிஎஸ், தம்பித்துரை ஆகியோர் பலமுறை பார்த்தனர் .
- சிகிச்சைக்கு பிறகு ஜெயலலிதா உடல்நிலை தேறியது. பின்னர்தான் திடீரென ஜெயலலிதா மரணமடைந்தார்.
- அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை அவரது அனுமதியுடன் வீடியோ எடுத்தோம்.