தமிழகத்தை நாடே திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறேன்.. ஜெ. பெருமிதம்
சென்னை: நாடே திரும்பிப்பார்க்கும் வகையில் வளமான, அமைதியான, எழுச்சியான தமிழ்நாட்டை கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக அரசு உருவாக்கி இருப்பதாக தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தமாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள மற்ற கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

எழுச்சியான தமிழகம்...
கடந்த 5 ஆண்டுகளில் இந்திய நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் உலக நாடுகள் பலவற்றில் விவாதிக்கப்படும் வகையிலும், சாதாரண ஏழை, எளிய உழைக்கும் மக்களின் பிரச்சினைகள் பலவற்றிற்கு தீர்வு கண்டு ஒரு வளமான, அமைதியான, எழுச்சியான தமிழகத்தை நான் உருவாக்கி இருக்கிறேன்.

மக்களோடு கை கோர்த்து...
‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்பதை உளப்பூர்வமாக உணர்ந்து, இந்த தேர்தல் களத்தில் மக்களோடு கைகோர்த்து மகத்தான வெற்றியை நோக்கி அ.தி.மு.க. நடைபோடுகிறது.

இதயம் கனிந்த நன்றி...
வருகின்ற மே 16-ந்தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க. தங்கள் கட்சியின் உளப்பூர்வமான ஆதரவை அளித்துள்ளமைக்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

களப்பணி...
தமிழகத்தில் மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் எனது தலைமையிலான நல்லாட்சி தொடர்ந்திடும் வகையில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு தாங்களும், தங்கள் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் தீவிரமாக களப்பணி ஆற்றிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications