ஜெசிந்தா பாண்டியன் கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்தது தூத்துக்குடி கோர்ட்
தூத்துக்குடி: தூத்துகுடியில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெசிந்தா பாண்டியன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது தூத்துக்குடி நீதிமன்றம்.
அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவராக இருந்தவர் பசுபதிபாண்டியன். ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவருக்கும், மூலைக்கரை பண்ணையார் குடும்பத்தினருக்கும் இடையில் கடந்த 1990 வருடம் புல்லாவெளி கிராமத்தினரின் உப்பளத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பான பிரச்சினையில் பகை மூண்டது.

இதனையடுத்து, பசுபதி பாண்டியன் புல்லாவெளி கிராம ஆதரவாளர்கள் 1993ல் பண்ணையார் குடும்பத்தினைச் சேர்ந்த அசுபதி பண்ணையாரைக் கொலை செய்தனர்.
இதற்கு பழிவாங்கும் முயற்சியாக பசுபதி பாண்டியனுக்கு பண்ணையார் குடும்பத்தினர் வைத்த குறியில், அவரது மனைவி ஜெசிந்தா பாண்டியன் 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதியன்று எப்போதும்வென்றான் அருகே படுகொலை செய்யப்பட்டார். லாரியால் மோதியும், வெடிகுண்டு வீசியும் ஜெசிந்தா கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக மூலக்கரையை சேர்ந்த அசுபதி பண்ணையார் மகன் சுபாஷ் பண்ணையார் உட்பட 12 பேர் மீது எப்போதும்வென்றான் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இவ்வழக்கில் சுபாஷ் பண்ணையார், தனசிங், சுரேஷ், செந்தில், மாயா, சிவலிங்கம், அருள் ராஜ், மோகன், வளன், பழனி, தாராசிங், குமார் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதில், செந்தில், வளன் ஆகியோர் இதுவரையில் போலீசாரால் கைது செய்யப்படவில்லை. 12 பேரில் ஒருவரான மாயா என்பவர் இறந்து விட்டார். குற்றம் சாட்டப்பட்ட மற்ற 9 பேர் மீதும் தூத்துக்குடி முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
10 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று நீதிபதி பால்துரை தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட 12 பேரின் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பதால் 9 பேரையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பால்துரை இன்னும் ஒரு மாதத்தில் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெசிந்தா கொல்லப்பட்ட ஜந்து ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனவரி 10 , 2012 அன்று திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டியில் அவருக்குச் சொந்தமான வீட்டின் முன்பு பசுபதி பாண்டியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications