மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தீர்ப்பு வழங்க முடியாது: சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி பேச்சு
பெரும்பான்மை மக்களின் கருத்தும், எதிர்பார்ப்பும் வேறு வகையில் உள்ளன. ஆனால் அவர்களின் விருப்பத்தை கோர்ட்டால் நிறைவேற்ற முடிவதில்லை என தலைமை நீதிபதி கவுல் தெரிவித்தார்.
சென்னை: பெரும்பான்மையான மக்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தீர்ப்பு வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறினார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று நாட்டின் 68வது குடியரசு தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பங்கேற்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இதன்பிறகு விழாவில் அவர் பேசியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டம் உலகத்திற்கே எடுத்துக்காட்டாக உள்ளது. நமது நாட்டில் உள்ள சட்ட திட்டங்களுக்குட்பட்டுதான் தீர்ப்புகளை வழங்க வேண்டியுள்ளது. தீர்ப்பு வழங்கும்போது சட்ட திட்டங்களைதான் நீதிபதிகள் கருத்தில் கொள்வார்கள்.
நமது நாட்டில் சட்டத்துறை முக்கிய அங்கம் வகிக்கிறது. பல நேரங்களில் பெரும்பான்மை மக்களின் கருத்தும், எதிர்பார்ப்பும் வேறு வகையில் உள்ளன. ஆனால் அவர்களின் விருப்பத்தை கோர்ட்டால் நிறைவேற்ற முடிவதில்லை. சட்டப்படிதான் நீதிபதிகள் செல்ல வேண்டிவரும். இவ்வாறு சஞ்சய் கிஷன் கவுல் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இளைஞர்களும், பொதுமக்களும் பெரும் புரட்சியையே நடத்தி காட்டினர். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் சில அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
இந்த சூழ்நிலையில், தலைமை நீதிபதியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.