கோடநாடு விவகாரத்தில் ‘ட்விஸ்ட்’.. விறுவிறு திருப்பங்களுடன் விசாரணை நடந்த நிலையில் நீதிபதி மாற்றம்!
நீலகிரி : கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை கடந்த ஒரு ஆண்டாக நீதிபதி முருகன் மற்றும் பொறுப்பு நீதிபதி நாராயணன் ஆகிய இருவரும் விசாரித்து வந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் மாற்றப்பட்டு நீதிபதி அப்துல் காதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிடிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது முதல் பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி முருகன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சேலம் மாவட்ட தொழிலாளர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதேபோல, பொறுப்பு நீதிபதியாக இருந்து கோடநாடு வழக்கை விசாரித்து வந்த உதகை மகிளா நீதிமன்ற நீதிபதி நாராயணனும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி வந்த அப்துல் காதர் நீலகிரி மாவட்ட அமர்வு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அப்போது முக்கிய ஆவணங்களும், விலை மதிப்புமிக்க பொருட்களும் திருடுபோயின. மேலும், அப்போது பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய நபரான ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 2017 ஏப்ரல் 28ஆம் தேதி இரவு நடைபெற்ற சாலை விபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

அதேபோல் மற்றொரு டிரைவரான சயான் சென்ற கார் கேரளாவில் விபத்துக்குள்ளானது. இதில் சயானின் மனைவி, மகள் இறந்தனர். சயான் காயத்துடன் உயிர் தப்பினார். கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த ஆபரேட்டர் தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இப்படி கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களில் அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கோடநாடு கொலை கொள்ளை குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஓராண்டாக நீதிபதி முருகன், பொறுப்பு நீதிபதி நாராயணன் ஆகியோர் விசாரித்து வந்த நிலையில் தற்போது அவர் மாற்றப்பட்டு, புதுக்கோட்டை மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி வந்த அப்துல் காதர் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications