இந்த அதிகாரத்தை மட்டும் வைத்து ஜெ. மரணத்தை விசாரிக்க முடியாது...அரசுக்கு ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்!
மறைந்த ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
Recommended Video
சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஆணையத்திற்கு தற்போதுள்ள அதிகாரம் போதாது என்று அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே கூடுதல் அதிகாரம் வழங்குமாறும் அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று பிரச்னையை முதலில் எழுப்பியவர் ஓ.பன்னீர்செல்வம். அதிலும் சிபிஐ விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் என்றும் எதிர் அணியாக செயல்பட்ட போது வலியுறுத்தினர்.
இதே போன்று பல்வேறு அரசியல் கட்சிகளும் சந்தேகங்களை கிளப்பவே, சசிகலா குடும்பத்திற்கு செக் வைக்கும் விதமாக முதல்வர் பழனிசாமி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்தார். 3 மாதத்தில் விசாரணை நடத்தி முடிக்க அரசு உத்தரவிட்ட நிலையில் விசாரணை தொடங்காத நிலையிலேயே 2 மாதங்கள் ஓடிவிட்டன.
விசாரணை தொடங்கவில்லை
ஜெயலலிதா மரணம் தொடர்பான கருத்துகளை தெரிவிக்க விரும்புவோர் ஆணையத்திடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யலாம் என்று நீதிபதி ஆறுமுகசாமி கூறி இருந்தார். இந்தத் தகவலைச் சொன்னதோடு சரி அத்தோடு கோயம்புத்தூர் சென்றவர் தான் இன்னும் விசாரணையைத் தொடங்கவே இல்லை. போயஸ் கார்டனில் இருந்து விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போயஸ் கார்டனில் இருந்த மிச்ச சொச்ச ஆவணங்களையும் வருமான வரித்துறை அள்ளிச் சென்று விட்டது.
ஆதாரம் கிடைக்குமா?
இனி அங்கு சென்று விசாரணையைத் தொடங்கினால் என்ன தொடங்காவிட்டால் என்ன என்ற நிலைமை தான் உள்ளது. ஜெயலலிதா மரணமடைந்து ஓராண்டு நெருங்கும் நிலையில் போயஸ் கார்டனில் இன்னமும் அவர் மரணம் குறித்த சந்தேகங்களுக்கு விடையளிக்கும் ஆதாரங்கள் அங்கு சிக்குமா என்பது மற்றொரு கேள்விக் குறி.
குறைந்த அதிகாரம்
நிலைமை இப்படி இருக்க நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையைத் தொடங்காமல் இருப்பதற்கும் காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது தற்போது விசாரணைக் கமிஷனுக்கு முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கான அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
அரசுக்கு கடிதம்
இந்த அதிகாரத்தை வைத்து உயர் பதவியில் இருப்போரையும்,வெளிநாடுகளில் இருப்போரையும் அழைத்து விசாரிக்க முடியாது. எனவே அதற்கேற்ப ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்குமாறு அரசுக்கு கமிஷன் கடிதம் அளித்துள்ளதாக தெரிகிறது.
கண்துடைப்பா?
இதற்கு அரசு அளிக்கும் பதிலை பொறுத்தே ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அடுத்த கட்டத்தை அடையும் என்று தெரிகிறது. ஆனால் அதிக அதிகாரம் இல்லாத ஒரு அமைப்பை எதற்காக விசாரணை கமிஷனாக அரசு நியமித்தது, அப்படியானால் கண்துடைப்பு வேலையாகத் தான் இந்த விசாரணை கமிஷன் போடப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.