சர்வாதிகார போக்கு: எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் தலைமை பொறுப்பிலிருந்து விலக வேண்டும்- கேசி பழனிச்சாமி
எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் கேசி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கோவை: எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் கட்சியின் தலைமை பொறுப்புகளிலிருந்து விலக வேண்டும் என்று அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் கே.சி. பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
பாஜகவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக கொண்டு வரும் என்று கேசி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். அதற்கு கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பேசியதாக அவரை அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பதவிகளிலிருந்தும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் நீக்கிவிட்டனர்.
விவாதங்களில் கலந்து கொள்ளும் அமைச்சர்களும் சிறை சென்ற சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தூக்கியதுபோல் ஜெயலலிதாவையும் தூக்கியிருப்போம் என்று சொன்ன அமைச்சர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.
15 பேர் தீர்மானம்
கட்சியின் கொள்கை முடிவுகளை முடிவு செய்வதற்காக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், இரு துணை ஒருங்கிணைப்பாளர்கள் என 15 பேர் கொண்ட ஒரு குழுவை அமைப்போம் என்று பொதுக் குழுவில் தீர்மானம் போடப்பட்டது.
நான்தான் காரணம்
அதிமுக இணைப்புக்கு நான்தான் பெரிதும் பாடுபட்டேன். இருவரிடமும் பேசி வேறுபாடுகளை களைந்தேன். இந்த இணைப்புக்கு அஸ்திவாரம் போட்டேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றால் அதிமுக எம்பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களித்தால் மட்டுமே இது சாத்தியம்.
அதிமுக கொள்கை
ஜெயலலிதாவும் காவிரியின் உரிமையை நிலைநாட்டுவதற்காக போராடினார்கள். அதுதான் அதிமுகவின் கொள்கைகள். இதன் அடிப்படையில்தான் நான் அவ்வாறு பேசினேன். நாங்கள்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், யாரை வேண்டுமென்றாலும் கட்சியிலிருந்து நீக்குவோம் சேர்ப்போம் என்று சர்வாதிகார மனப்பான்மையுடன் உள்ளனர். அதிமுகவின் பை லாவை இவர்கள் திருத்தம் செய்துள்ளார்கள்.
எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டது
அந்த திருத்தத்தை தேர்தல் ஆணையம் பரிசீலனையில் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அப்படியிருக்கும்போது இவர்கள் எப்படி ஒருங்கிணைப்பாளராகவும் இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட முடியும். அதிமுகவை உருவாக்கின பிறகு எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட பை- லாவை மட்டுமே தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிறது என்றுதானே அர்த்தம்.
என்ன நடவடிக்கை
ஓபிஎஸ் எடப்பாடியின் சுயலாபத்துக்காக அதிமுகவை பலியிடக் கூடாது. எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து விலக வேண்டும். இவர்கள் இருவரையும் ஒதுக்கிவிட்டு குற்றச்சாட்டுக்கு ஆளாகாதவர்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்பவர்கள் மட்டுமே இயக்கத்தை ஒருங்கிணைக்க வேண்டும். காவிரிக்காக என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதை இதுவரை ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் சொல்லவில்லை என்றார் அவர்.