மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே ரேங்க் முறை மாற்றம் - செங்கோட்டையன்
ரேங்க் முறையினால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதை போக்கும் வகையில் ரேங்க் முறை கைவிடப்படுவதாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை: பொதுத்தேர்வில் ரேங்க் முறை கைவிடப்படுகிறது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்காகவே ரேங்க் முறை கைவிடப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் போது மாணவர்கள் மத்தியில் ஒருவித பதற்றம் ஏற்படுவது இயற்கையே. ஒரு மதிப்பெண் குறைந்தாலும் ரேங்க் குறைந்து விடுமே என்று ரிசல்ட் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே தூக்கத்தை தொலைத்து விடுவார்கள்.
நன்றாக படிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தி விடுவார்கள். இந்த சிரமத்திற்கு முடிவு கட்டும் விதமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முதல் மூன்று மதிப்பெண் பெறும் மாணவர்களின் பெயர்கள், கல்வி நிறுவனங்கள் பெயர் வெளியிடப்படாது என்றும், மாநில அளவில், மாவட்ட அளவில் மதிப்பெண் பெறும் மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாது என்றும் கூறியுள்ளார்.
ரேங்க் முறை கைவிடப்படுவதற்கான அரசு ஆணையை வெளியிட்ட அமைச்சர் செங்கோட்டையன், எதற்காக ரேங்க் முறை கைவிடப்பட்டது என்றும் விளக்கம் அளித்தார். பள்ளி தேர்வு முடிவுகள் வெளியாகும் போது மாணவர்களுக்கு மட்டுமல்லாது பெற்றோர்களுக்கும் ஒரு அழுத்தம் ஏற்படுகிறது என்றும் இதனை தவிர்க்கவே ரேங்க் முறை கைவிடப்பட்டு புதிய முறை அமல்படுத்தப்படுவதாகவும் கூறினார்.
சிறந்த மாணவர்களுக்கு சான்றிதழ், கல்வி உதவி தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறிய அமைச்சர் செங்கோட்டையன், மதிப்பெண்கள் மட்டுமே மாணவனின் கல்வித்தரத்தை தீர்மானிப்பதில்லை என்றார்.