கருணாநிதிக்கு அரசு மரியாதை அதிமுக போட்ட பிச்சை.. கடம்பூர் ராஜூ சர்ச்சைக்குரிய கருத்து
Recommended Video
கோவில்பட்டி: திமுக தலைவர் கருணாநிதிக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது அதிமுக போட்ட பிச்சை என்று செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார்.
அதிமுக போட்ட பிச்சை
அவர் பேசுகையில் மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் வழங்குவதற்கு எதிராக நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யாமல், தாங்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டோம். அது போல் அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது அதிமுக போட்ட பிச்சை.
மோசடி வழக்கு
சுகாதாரத் துறையை சிறப்பான முறையில் கவனித்துவரும் விஜயபாஸ்கர் எந்த முறைகேடும் செய்யவில்லை. ஆனால் , டிடிவி தினகரன்தான், அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சிறைக்கு சென்றார்.
குற்றச்சாட்டு
ஆர்.கே.நகர் தொகுதியில் மோசடி செய்து வெற்றிபெற்ற டிடிவி தினகரன், தனது கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடத் தயாரா. மேலும் தங்கள் மீது என்ன குற்றச்சாட்டுக்களை தெரிவித்தாலும், தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதிர்ச்சி
கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வழங்க மறுத்து காந்தி மண்டபத்தில் அரசு இடம் ஒதுக்கியது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்ற நிலையில் திமுகவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. இந்நிலையில் ஒரு முன்னாள் முதல்வர், இறக்கும்போது எம்எல்ஏவாக இருந்தவர் என மரியாதை துளி கூட இல்லாமல் அமைச்சர் இவ்வாறு அவதூறாக பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.