வீட்டு மனை பட்டா.. பூம் பூம் மாட்டுக்காரர்கள் ஒருபக்கம், உதயநிதி மறுபக்கம்.. நடுரோட்டிலே ஒரே டென்ஷன்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த இருவேறு சம்பவங்கள் ஒரே நாளில் பரபரப்பை தந்துவிட்டன.. இரண்டுமே ஒரே பிரச்சனையை வலியுறுத்தி நடந்த போராட்டங்கள் பலரது கவனத்தையும் திருப்பி வருகிறது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ளது உலகங்காத்தான் என்ற கிராமம். இங்கு வசித்து வருபவர் வெங்கடேசன் - லட்சுமி தம்பதியினர்.. இவர்கள் 2 குழந்தைகளுடன் வீடு இல்லாத நிலையில் உள்ளதால், தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு தந்தனர்.

தம்பதி: இதையடுத்து, கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு, கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி வருவாய் துறையினர் இந்த தம்பதிக்கு வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளனர்.. ஆனால், வீட்டு மனை பட்டா பெற்ற தம்பதியினர் எங்களுக்கான வீட்டுமனை இருக்கும் இடத்தை காட்டுங்கள் என்று வருவாய் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
உடனே வருவாய் துறையினரும், அரசு இடத்தில் நிலம் ஒதுக்கி எல்லை கற்களை நட்டு, இதுதான் உங்கள் இடம் என்று தம்பதியிடம் சொல்லி உள்ளனர்.. ஆனால் இதை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஏற்காமல், அரசு அதிகாரிகளால் நடத்தப்பட்ட கல்லை பிடுங்கி எறிந்ததாக தெரிகிறது. மேலும் அந்த தம்பதி அந்த இடத்திற்கு வரவிடாதபடி மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
உதயநிதி: இதனால் வெங்கடேசன், லட்சுமி தம்பதியினர் என்ன செய்வதென்றே புரியாமல் விழித்தபோதுதான், உலகங்காத்தான் கிராமத்திற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்திருந்தார்.
அங்கு பொதுமக்களுக்கு உதயநிதி நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு காரில் ஏற போனார். உடனே இந்த தம்பதியினர், உதயநிதியிடம் சென்று முறையிட்டு அழுது கொண்டே ஓடினார்கள். ஆனால், அங்கிருந்த போலீசார் அவர்களை தடுக்கவும், அதைக் கேட்காமல் அந்தத் தம்பதியினர் உதயநிதியிடம் சொல்வதற்காக சப்தம் போட்டுக் கொண்டே இருந்தார்கள். பிறகு, கலெக்டர், வெங்கடேசனின் தோளை தட்டிக்கொடுத்து, அவர்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்தார்.
தாழ்வாரங்கள்: இதே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடக்கனந்தல், கச்சிராயபாளையம், பல்லவச்சேரி, புதுபள்ளகச்சேரி, தண்டலை, பீதாங்கால், சூளாங்குறிச்சி, வேளானந்தல், புக்குளம் உட்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூம்பூம் மாட்டுக்காரர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் தாங்கள் தங்குவதற்கு வீடுகள் இல்லாமல் பள்ளிக்கூட தாழ்வாரங்களிலும், கோயில் வளாகங்களிலும், சத்திரங்களில் தங்கியிருக்கிறார்கள்.
இதற்காக சமூக மக்களின் அனுமதியையும் பெற்றுள்ளனர். அந்த சத்திரங்களில்தான், வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அதனால், பூம்பூம் மாட்டுக்காரர்கள், தங்களும் இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டும் என்று கேட்டு, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, ஆண்கள் மேளம் அடித்து தங்கள் கோரிக்கைகளை சொன்னார்கள்.. அதேபோல பெண்களோ, அடுப்பு பற்றவைத்து சமையல் செய்துகொண்டே, காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
சமாதானம்: இந்த விஷயம் அதற்குள் கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாசில்தாருக்கு தெரியவரவும், அவர் பதறியடித்து கொண்டு ஓடிவந்தார்.. இன்னும் ஒரே மாசத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதாக உறுதி அளிக்கவும், பூம்பூம் மாட்டுக்காரர்களின் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது. ஒரே மாவட்டத்தில், ஒரே பிரச்சனையை வலியுறுத்தி நடந்த இருவேறு சம்பவங்கள் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை தநதுவிட்டது.












Click it and Unblock the Notifications