கமல் சொல்வதைப் போல 'இசங்கள்' இல்லாத தேர்தல் அரசியல் தமிழகத்தில் சாத்தியமா?
இசங்கள் இல்லாத ஒரு அரசியல் என்பது தமிழகத்தில் சாத்தியம்தானா? கமல்ஹாசனின் இசங்களற்ற அரசியல் வெல்லுமா?
Recommended Video
சென்னை: மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை தொடங்கியுள்ள கமல்ஹாசன் வலதா, இடதா என 'இசங்கள்' இல்லாமல் 'மய்யமாக' நடுநிலையாக இருப்போம் என கூறியுள்ளார். தமிழகத்தில் 'இசங்கள்', சித்தாத்தங்கள் இல்லாத தேர்தல் அரசியல் சாத்தியப்பட்டிருக்கிறதா? என்பதையும் பார்க்க வேண்டும்.
1900களில் சமூக ஒடுக்குமுறைகளில் இருந்து மக்களை விடுவிக்க, கடைகோடி மக்களுக்கும் கல்வி அறிவைத் தர, சக மனிதனை மனிதனாக நடத்த என்பதற்காக சில சிறிய அமைப்புகள் உருவாகின. அதற்கு சித்தாந்தம், இசம் என்பதெல்லாம் கிடையாது. பிராமணரல்லாத மக்கள் மேம்பாடு என்பதாக மட்டும் இது இருந்தது.
அப்போது தென்னிந்திய மாநிலங்களில் பெரும்பாலானவை சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்தன. ஆகையால் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிகட்சி) என கட்டமைத்து தேர்தலில் போட்டியிட்டது. அதே காலகட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் நடத்தினார். சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை என்பது நாத்திகமாக இருந்தது.
திராவிடம், கம்யூனிசம்
ஒருகட்டத்தில் நீதிகட்சியும் சுயமரியாதை இயக்கமும் கை கோர்க்க பிறந்ததுதான் திராவிடர் கழகம். இங்கிருந்துதான் திராவிட சித்தாந்தம் பயணிக்கிறது. திராவிட சித்தாந்தம் பிறப்பெடுப்பதற்கு முன்னரே கம்யூனிச தத்துவமும் இந்த மண்ணில் வலம் வந்தது. வாஞ்சிநாத அய்யர் போன்ற இந்துராஷ்டிரா என்கிற இந்துத்துவா கொள்கையின் சிதறல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன.
தேர்தலை புறக்கணித்த திமுக
வர்க்க புரட்சியை பேசிய கம்யூனிஸ்டுகளும் மக்கள் விடுதலையை பேசிய திராவிடர் கழகமும் தேர்தல் அரசியலுக்குள் போகவில்லை. நாடு விடுதலை அடைந்த காலத்தில் திராவிட சித்தாந்தத்தில் பிறந்த முதல் அரசியல் கட்சி திமுக. இதுவும் தொடக்க காலங்களில் தேர்தல் அரசியலுக்குப் போகவில்லை. இதனால் காங்கிரஸ், இடதுசாரிகள் தேர்தல் அரசியலில் கோலோச்சி வந்தனர்.
அரை நூற்றாண்டு சாதனை
மெல்ல மெல்ல திமுக தேர்தல் அரசியலுக்குள் நுழைய 1967-க்குப் பின்னர் திராவிட அரசியல் கட்சிகள் மட்டுமே மண்ணில் ஆள முடியும் என்கிற நிலை உருவானது. திமுகவில் இருந்து வெளியேறிய எம்ஜிஆர் தமது இசத்தை அண்ணா இசம் எனக் கூறி கட்சியை வழிநடத்தினார்.
அதிமுகவும் திராவிட அரசியலும்
எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் சிவாஜி கணேசன் தமிழக மக்கள் முன்னேற்ற முன்னணி என்கிற தமிழ்த் தேசியத்தை மையமாக வைத்து கட்சியை நடத்தினார். ஆனால் அது கரைசேரவில்லை. ஜெயலலிதா தலையெடுத்த காலத்தில் கூட ' கட்டுண்டு வாழோம்.. பிரிவினையை நாடோம்' என்கிற திராவிட அரசியலைத்தான் அதிமுக பின்பற்றியது.
பாமக எப்படிப்பட்ட இசம்?
திமுக, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் திராவிட கட்சிகளின் நீட்சிகளாகத்தான் தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டனர். பாட்டாளி மக்கள் கட்சியோ தந்தை பெரியாரையும் காரல் மார்க்ஸ் உள்ளிட்ட அத்தனை தலைவர்களையும் ஏற்றுக் கொண்ட கட்சியாக வந்தாலும் அதன் மீதான ஒரு ஜாதிய முத்திரை வலுவானதாகவே பதிந்து போனதால் இசங்களுக்கு அப்பாற்பட்ட கட்சியாக அது இருந்து வந்தது.
கமலுக்கு முன்னவர் விஜயகாந்த்
விஜயகாந்தின் தேமுதிகதான் இன்றைய கமலின் இசங்கள் அற்ற அரசியலுக்கு முன்னத்தி ஏர் எனலாம். கட்சியின் பெயரிலேயே திராவிடத்தையும் தேசியத்தையும் இணைத்து வைத்தார். அவரால் தனித்து போராட முடியாமல் திராவிட கட்சியின் தோளில் சவாரி செய்து இப்போது சுவடு தெரியாமல் போய்விட்டடார். விஜயகாந்துக்குப் பின்னர் வட இந்திய கட்சியான ஆம் ஆத்மி தமிழகத்தில் காலூன்ற என்.ஜி.ஓக்களை தலைவர்களாக்கியது. அது கானல்நீராகிப் போனது.
தேசிய இன அரசியலை பேசும் நாம் தமிழர்
மொழிவழித் தமிழ்த் தேசியம், தேசிய இனம் என்கிற கோட்பாட்டு அரசியலை முன்வைக்கிறது நாம் தமிழர் கட்சி. திராவிடம், மரபினத்தை பேசியது. நாம் தமிழர் மரபினத்தை நிராகரித்து தேசிய இனத்தைப் பற்றி பேசுகிறது. நாம் தமிழர் முன்வைப்பது தேசிய இனம் சார்ந்த அரசியல். கடந்த காலங்களில் திராவிட மரபின கோட்பாட்டுக்குள் நின்று கொண்டு திராவிட இயக்கங்கள் தமிழ்த் தேசியம் பேசின. அங்கிருந்து வந்த நாம் தமிழர் கட்சியோ, தமிழ் தேசியத்தையே ஒரு இயக்கமாக, கட்சியாக கொண்டு செல்கிறது.
பாஜகவும் இந்து இசமும்
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக இந்துத்துவா இசத்தைப் பேசுகிற பாஜக தமிழகத்தில் இன்னும் தம்மை நிலை நிறுத்த போராடுகிறது. 1996-97 கால கட்டத்தில் அத்வானி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த போது அவரை வரவேற்ற பாஜகவினர் மொத்தம் 5 பேர்தான். ஆனால் இன்று பாஜகவுக்கும் இங்கே கட்சிகளில் ஒரு இடம் இருக்கிறது. காரணம் அது பேசுகிற 'நாம் இந்துக்கள்' என்கிற இசம்தான்.
இசங்கள் இல்லாத கமல்
இப்படி தமிழகத்தில் இசங்களை மேம்போக்காக பேசியாவது கட்சிகள் நிலை கொண்டிருக்கின்றன. இப்போது விஜயகாந்தைப் போல ஆம் ஆத்மியை போல இசங்கள் அற்ற ஒரு அரசியலை கமல்ஹாசன் சொல்கிறார். தம்முடன் வலதுசாரிகளையும் இடதுசாரிகளையும் கருப்பு கட்சியினரையும் சிவப்பு கட்சியினரையும் வைத்துக் கொண்டு களத்துக்கு வந்துள்ளார். எந்த இசமும் எதுவும் மாறாது என்பதை சொல்லவில்லை.... மாற்றம் என்பதுதான் மாறாதது. இசங்களோடு பயணித்த தமிழகம் இசங்களற்ற, சித்தாந்தமற்ற கமல்ஹாசனை தாங்கிப் பிடிக்குமா? என்பது மக்களின் கையில்!