முரசொலி பவளவிழாவில் கமல் பங்கேற்பது உறுதி.... அழைப்பிதழில் ரஜினி பெயர் இல்லை
முரசொலி பவளவிழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. ரஜினிகாந்த் பெயர் அழைப்பிதழில் இடம் பெறவில்லை.
சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளிதழின் பவளவிழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. ஆனால் நடிகர் ரஜினிகாந்தின் பெயர் அழைப்பிதழில் இடம்பெறவில்லை.
முரசொலி நாளிதழ் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. நாளிதழின் பவளவிழாவை பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 10,11ஆம் தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் முரசொலி பவளவிழா கொண்டாடப்படுகிறது.
இதற்கான அழைப்பிதழும் தயாராகிவிட்டது. திமுக தலைவர் கருணாநிதியிடம் அழைப்பிதழை காண்பித்து ஒப்புதல் பெற்று விட்டார் ஸ்டாலின்.
கண்காட்சி திறப்பு
ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முரசொலி வளாகத்தில் காட்சி அரங்கம் திறக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தலைமை தாக்குகிறார். இந்து என். ராம் பங்கேற்று கண்காட்சி அரங்கை திறந்து வைக்கிறார். கையெழுத்து பிரதியாக முரசொலி தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை உள்ள முரசொலி வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வாழ்த்தரங்கம்
ஆகஸ்ட் 10ஆம் தேதி 6 மணிக்கு சென்னை சேப்பாக்கம் ஒமந்தூரார் அரசினர் வளாகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் முரசொலி பவளவிழா வாழ்த்தரங்கம் நடைபெறுகிறது. முரசொலி செல்வம் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் இந்து என். ராம், நடிகர் கமல்ஹாசன், தினத்தந்தி அதிபர் பாலசுப்ரமணிய ஆதித்தன், கவிஞர் வைரமுத்து, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தலைவர் மனோஜ்குமார் சந்தாலியா, ஆனந்தவிகடன் மேலாண் இயக்குநர் ப.சீனிவாசன், தினமலர் ஆசிரியர் ரமேஷ், தினகரன் செய்தி ஆசிரியர் மனோஜ்குமார், டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் அருண் ராம் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசுகின்றனர்.
ஆகஸ்ட் 11 பொதுக்கூட்டம்
ஆகஸ்ட் 11 மாலை நந்தனம் ஒஎம்சிஏ விளையாட்டுத்திடலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. முரசொலி பவளவிழா மலரை நல்லக்கண்ணு வெளியிடுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன், உள்ளிட்ட 23 கட்சித்தலைவர்க வாழ்த்துரை வழங்குகின்றனர்.
ரஜினி, வைகோ
இந்த விழாவில் பங்கேற்க ரஜினி, வைகோவிற்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால் தான் பங்கேற்க இயலாத காரணத்தை வைகோ தெரிவித்ததால் அவருடைய பெயர் அழைப்பிதழில் இடம் பெறவில்லை. அதே நேரத்தில் ரஜினி பார்வையாளராக பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருணாநிதி பங்கேற்க மாட்டார்
முரசொலி தொடங்கிய நாள் முதலாக உடன்பிறப்புக்களுக்கு கடிதம் எழுதி எழுச்சியூட்டிய கருணாநிதி, தற்போது உடல்நிலை குன்றியிருக்கிறார். எனவே பவளவிழாவில் கருணாநிதி பங்கேற்க மாட்டார் என்பதே தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதிய கூட்டணிக்கு அச்சாரம்
சமீபத்தில் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற வைரவிழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியிலும் கருணாநிதி பங்கேற்கவில்லை. வட இந்திய தலைவர்கள்தான் அதிகம் பங்கேற்றனர். அந்த குறையை போக்கும் வகையில் புதிய கூட்டணிக்கு அச்சாரம் போடும் விதமாக முரசொலி பவளவிழாவில் பங்கேற்க தமிழக கட்சித்தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.