'வெல்வோம் என காத்திருக்க மாட்டேன். தோற்றால் என்ன கதி எனக் கலங்கவும் மாட்டேன்!' - கமல்
சென்னை: ஒருநாள் வெல்வோம் என்று காத்திருக்க மாட்டேன். தோற்றால் என்ன கதி எனக் கலங்கவும் மாட்டேன் என்று கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.
ஆனந்த விகடனில் தனது அரசியல் பிரவேசம் குறித்து கட்டுரைத் தொடர் ஆரம்பித்துள்ளார் கமல் ஹாஸன். என்னுள் மையம் கொண்ட புயல் என்ற அந்த தொடரின் முதல் கட்டுரையில், முதல்வர் பதவி ஆசை குறித்து முன்பு தான் தெரிவித்த கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். தான் ஆங்கிலத்தில் சொன்னதை தமிழில் பளபளப்பான தலைப்புக்காக தவறாக மொழி பெயர்த்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

கேள்வி பதில் பாணியில் கமலே எழுதியுள்ள அந்த விளக்கத்தை மட்டும் இங்கே தருகிறோம்.
"கேள்வி: "உனக்கு முதலமைச்சனாக வேண்டுமா?''
நான்: அது என் ஆங்கிலப் பேட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு. அதுவும் பளபளக்கும் தலைப்புத் தேடும் சில ஊடகங்களின் தேவைக்கேற்ப மொழிபெயர்க் கப்பட்டது. என் மையக் கருத்தைச் சிதைத்துக் கிட்டிய தலைப்பு. ஆட்சி பலத்தை அசைக்கக் கூடிய அகற்றக்கூடிய செயல் எதுவோ அதுவே என் ஆசை. புதிய தமிழ் மாநிலம் அடுத்த தலைமுறையாவது காணவேண்டும் என்ற பல தலைமுறை ஆசையை என் தலைமுறையாவது நிறைவேற்றத் துடிக்கும் தமிழனின் ஆசை.
யாம் முதல்வர் என்பது என்னை மட்டும் குறிப்பிடாது. என் மக்களைக் குறிக்கும். யாமே முதல்வராக முதன்மையானவராக இருத்தல் வேண்டும். அமைச்சர்களெல்லாம் இம்முதல்வர்களின் கருவியாகச் செயல்படவேண்டும். ஜனங்களோ நாயகம் செய்தல் வேண்டும். நான் தொண்டன், அடிப்பொடியா, உச்சிக்குடுமியா என்பது முக்கியமல்ல. ஒருநாள் வெல்வோம் என்று காத்திருக்க மாட்டேன். தோற்றால் என்ன கதி எனக் கலங்கவும் மாட்டேன்.''












Click it and Unblock the Notifications