'இறந்தகாலமாகிவிட்டது ஒரு இளம் தளிர்!' - அனிதா மரணம் பற்றி பிக்பாஸில் பேசும் கமல்
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். வார இறுதியின்போது பங்குபெறும் அவர் சமகால அரசியல் நிகழ்வுகளை விமர்சிப்பார்.
கடந்த வாரங்களின்போது, மத்திய மாநில அரசுகளைப் பற்றியும், ஊழல் நிர்வாகம் பற்றியும் கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.
பிக்பாஸில் அவரது அணுகுமுறைகளைப் பார்ப்பதற்காகவே அரசியல் பார்வையாளர்களும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிதா :
அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் அனிதா. 17 வயதான இவர், நடந்து முடிந்த 12ஆம் வகுப்புத் தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். இவரது மருத்துவத்திற்கான கட் - ஆஃப் மதிப்பெண் 196.75 ஆக இருந்தது. எனவே, தமக்கு மருத்துவக் கல்லூரியில் நிச்சயம் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார்.
நீட் பிரச்னை :
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தால், தனக்குக் கிடைக்கவேண்டிய மருத்துவ இடம் கிடைக்காமல் போகும்; மருத்துவராகும் கனவு பறிபோய்விடும் என உச்ச நீதிமன்றத்தில் அனிதா மனு அளித்திருந்தார்.
அனிதா தற்கொலை :
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா தற்கொலை செய்துகொண்டார்.
மக்கள் கொதிப்பு :
மருத்துவக் கனவோடு மரித்துப்போன அனிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் பொதுமக்கள், நீட் தேர்வை எதிர்க்கத் தவறிய மாநில அரசையும், கிராமப்புற மாணவர்களின் கல்விக்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசையும் வன்மையாகக் கண்டித்து வருகின்றனர்.
கமல் கன்டனம் :
'அனிதா என்ன ஊர், என்ன பெயர் என்றெல்லாம் நான் பார்க்க விரும்பவில்லை. என் பெண்ணாக இருந்தால்தான் நான் கோபப்பட வேண்டுமா? கனவோடு வந்த அனிதாவை மண்ணோடு மண்ணாக அனுப்பிவிட்டோம். கட்சி கடந்து, மாநிலம் கடந்து, இந்த விஷயத்துக்காக வெகுண்டெழ வேண்டும்' என நேற்றே கோபமாகப் பேசியிருந்தார் கமல்.
இன்றைய பிக்பாஸில் :
வழக்கமாகப் பொதுவெளியில் நடக்கும் நிகழ்வுகளை சூசகமாக பிக்பாஸில் பேசும் கமல், இன்றைய நிகழ்ச்சியில் நேற்று நீட் தேர்வுக்கெதிராக போராடி மறைந்த மாணவி அனிதாவின் தற்கொலை பற்றிப் பேசுகிறார். 'எதிர்காலத்தைப் பொய்த்துவிட்டு இறந்தகாலமாகிவிட்டது ஒரு இளம் தளிர்...' என அவர் பேசும் நிகழ்ச்சியின் ப்ரொமோ வெளியாகி இருக்கிறது.