தீவிர அரசியலில் கமல்... 27 மாவட்ட நற்பணி மன்றத்தினருடன் இன்றும் ஆலோசனை!
அரசியல் கட்சி தொடங்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் 2வது நாளாக ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Recommended Video
சென்னை : சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது ரசிகர்களுடன் கமல்ஹாசன் 2வது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அடுத்த மாதம் அரசியல் கட்சி தொடங்கி மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் அரசியல் பயணம் குறித்து ரசிகர்களுடன் கமல் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கமல்ஹாசன் அடுத்த மாதம் 21ம் தேதி ராமநாதபுரத்தில் உள்ள கலாம் வீட்டில் இருந்து தன்னுடைய அரசியல் கட்சியை தொடங்குகிறார். இதனைத் தொடர்ந்து மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கமல் சுற்றுப்பயணமும் மேற்கொள்கிறார். இதனை முன்னிட்டு கமல் நற்பணி மன்ற நிர்வாகிகளை சென்னையில் சந்தித்து வருகிறார்.
ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட நற்பணி மன்ற நிர்வாகிகளை நேற்று கமல் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன்று எஞ்சிய மாவட்ட ரசிகர் மன்றத்தினரை கமல் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். நற்பணி மன்றங்கள் மூலம் மக்கள் நலப் பணிகளை அதிகரிக்க வேண்டும் என்று கமல் ஆலோசனை வழங்கியுள்ளார். சுற்றுப் பயணத்தின் போது ரசிகர்கள் ஒழுக்கத்தை கடைபிடித்து ஒற்றுமையாக இருப்பது மற்றும் கட்சியின் பணிகள் குறித்தும் கமல் ஆலோசித்ததாக தெரிகிறது.
27 மாவட்ட நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு 25 பேர் வீதம் 625 பேர் கமலுடனான சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 3 மாவட்டங்கள் வீதம் நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து வருகிறார் கமல், ஆலோசனையின் முடிவில் மாலையில் இவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.