கமல் லாயக்கில்லை.. விஜய் பொறுத்திருக்கனும்.. சீமான் தெளிவாக இருக்கிறார்.. இயக்குநர் அமீர்
அரசியலுக்கு கமல் லாயக்கில்லை, விஜய் சற்று பொறுத்திருக்க வேண்டும். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெளிவாக இருக்கிறார் என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: அரசியலுக்கு யார் தகுதியானவர் என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் அமீர், நாம் தமிழர் கட்சியின் சீமான்தான் தற்போது சரியான பாதையில் செல்கிறார் என்று கூறியுள்ளார்.
சன் நியூஸ் சேனலில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் இணை தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை விவகாரம், தமிழக அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து கேட்கப்பட்டது.
அப்போது அவர் கூறுகையில், பண விவகாரத்தில் அன்புச் செழியன் கறார் பேர்வழி என கேள்விப்பட்டுள்ளேன். அதனால்தான் நான் அவருடன் வியாபாரம் வைத்துக் கொள்ளவில்லை. அன்புச்செழியனுக்கு அரசியல் பின்புலம் உள்ளது என்று எனக்கு தெரியும். ஆனால் யார் இருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாது.

அரசியல்வாதி பின்புலம்
அசோக் குமார் தற்கொலை விவகாரத்தில் இதுவரை காவல் துறை சரியாகதான் செயல்படுகிறதாக நான் கருதுகிறேன். ஆனால் தலைமறைவாக உள்ள அன்புச்செழியன் பிடிப்படாமல் இருக்க அரசியல்வாதி யாரோ பின்புலமாக உள்ளார். அவர் யாரென்றுதான் தெரியவில்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்
தற்போது நடைபெறும் முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி சரியாக போய் கொண்டிருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான சரியான அளவுகோல் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆகும். இந்த இடைத்தேர்தலில் என்னதான் பணம் கொடுத்தாலும் இந்த தேர்தலின் முடிவு என்பது வரக் கூடிய சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியதாகத்தான் இருக்கும். இந்த தேர்தலில் நிச்சயமாக ஆளும்கட்சியின் பலம் இருக்கும். அதிகார துஷ்பிரயோகங்கள் சில இடங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. தேர்தல் ஆணையமும் அவர்களுக்கு உதவியாக இருக்கும். மத்திய அரசும் ஆளும் கட்சிக்கு உதவியாக இருக்கும். இதை நான் மறுக்கவே இல்லை.

எடப்பாடி ஆட்சி பினாமி ஆட்சி
தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியை பாஜகவின் பினாமியாகதான் பார்க்கிறேன். இதை தமிழிசை மறுப்பதென்ன, சின்னக்குழந்தையிடம் கேட்டாலும் அது சொல்லும். முந்தைய நாள் இரட்டை இலை சின்னம் கிடைத்தது. அடுத்த நாள் ஆர்.கே நகருக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. சின்னத்தை கொடுத்து வெற்றி அடைய பார்க்கிறீர்கள். சினிமாவில் ஜாதி பார்த்து யாருக்கும் பணியமர்த்தப்படுவது இல்லை. மக்களுக்கு நல்லது செய்வதற்காக யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

கமல் சரியான தலைமை அல்ல
தமிழ்நாட்டிற்கு வேறு ஒரு தலைமை தேவைப்படுகிறது. இதற்கு தகுதியான நபராக கமல் தன்னை வளர்த்து கொள்ள வேண்டும். இன்று கமல் தமிழ்நாட்டுக்கு சரியான தலைமை அல்ல. சமீபகாலங்களாக ஆளும் அதிமுகவை விமர்சனம் செய்வதில்தான் முனைப்பு காட்டினாரே தவிர, மக்கள் பிரச்சினைகள் எதையும் அவர் முன்னெடுக்கவில்லை. டுவிட்டரில் கருத்தை போட்டால் அது மக்களை சந்திப்பது என்றாகிவிடுமா. நாட்டில் உள்ள 8 கோடி பேரும் டுவிட்டரில் இருக்காங்களா.

தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை
கமல்ஹாசன் மக்கள் பிரச்சினைகளை முழுமையாக உள்வாங்கி சென்றால்தான் தலைமை பண்பை ஏற்பதற்கு சரியாக இருக்கும். இது எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது களத்தில் இறங்கினால்தான் தெரியும். விஜய்யின் வயதை கணக்கு செய்தாலும், திரைப்படங்களின் வெற்றிகளை கணக்கு செய்தாலும் இவர்கள் வந்தவுடன் முதல்வர் சீட்டில் உட்காருவதற்கான வாய்ப்பு குறைவு. எனக்கு தனிக்கட்சி தொடங்கும் எண்ணமெல்லாம் கிடையாது. அந்த அளவுக்கு பெரிய ஆளாக என்னை நான் கற்பனை செய்து பார்த்தது கிடையாது. சீமானின் கொள்கைகளும், சிந்தனைகளும் மிகவும் தெளிவாக உள்ளது என்று அமீர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications