காவிரி குறித்து ரஜினி கூறியது நல்ல கருத்துதான்; ஆதரிக்கிறேன்- கமல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே நியாயமான தீர்வு என்று ரஜினி கூறியுள்ளது வரவேற்புக்குரியது என்று கமல் தெரிவித்தார்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே நியாயமான தீர்வு என்று ரஜினி கூறியுள்ளது வரவேற்புக்குரியது என்று கமல் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது குறித்து தமிழகத்தில் விவசாயிகள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். காவிரி தொடர்பான திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் விதித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது.
இதனால் தமிழக மக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விஷயங்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதனிடையே மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழக அரசு அழுத்தம்
அப்போது அவர் கூறுகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஓட்டு விளையாட்டு. தண்ணீரில் அரசியல் செய்யக் கூடாது. முன்கூட்டியே மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். டெல்லிக்கு சென்று போராட வேண்டுமென்றால் நான் தயார்.
ஸ்டெர்லைட்
மத்திய அரசு நினைத்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது எளிது. திட்டம் என்பதற்கான விளக்கம் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வரை இன்று சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். ஸ்டெர்லைட் போராட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி மக்களுடன் கலந்து கொள்வேன் என்றார் கமல்.
நியாயமான தீர்வு
காவிரி மேலாண்மை குறித்து ரஜினிகாந்த் டுவிட்டரில் குறிப்பிடுகையில், காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும் என்று கூறியுள்ளார்.
நழுவுகிறார் ரஜினி
காவிரி குறித்து ரஜினியின் கருத்து பற்றி கமலிடம் கேட்டபோது நல்ல கருத்துதான், ஆதரிக்கிறேன் என்றார் கமல். இமயமலைக்கு செல்லும் போது காவிரி குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் மௌனம் காத்தார். இதுகுறித்து அப்போது கமலிடம் கேட்டதற்கு அவர் காவிரிக்கு மட்டுமா நழுவுகிறார், எல்லாவற்றுக்கும்தான் நழுவுகிறார் என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.