தமிழக அரசின் ரூ.150 கோடி சொத்தை காப்பாற்றிய காமராஜரின் கையெழுத்து!
சென்னை: காமராஜர் போட்ட ஒரு கையெழுத்து பிரதி சிக்கியதால், தமிழக அரசுக்கு சொந்தமான ரூ.150 கோடி மதிப்புள்ள சொத்து காப்பாற்றப்பட்டுள்ளது. மறைந்த பிறகும், தமிழகத்திற்கு காமராஜர் நன்மை செய்துவிட்டார் என்று சிலாகிக்கிறார்கள் தலைமைச் செயலக அதிகாரிகள்.
சென்னையின் கிண்டி தற்போது எவ்வளவு முக்கியமான பகுதி என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும், கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகைக்கு எதிரே உள்ள ஏரியா என்றால் அதன் முக்கியத்துவத்தை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
கிராமமாக இருந்தது
ஆனால், இந்த பகுதி 1960களில், வெங்கடராமபுரம் என்ற கிராமமாக இருந்துள்ளது. சுற்றிலுமுள்ள கிராமங்களை தன்னுள் ஈர்த்து சென்னை பெரிய பட்டணமாக விரிவடைந்தபோதுதான், இதற்கு கிண்டி என்று பெயர் வந்தது. அந்த இடத்திலுள்ள 1.62 ஏக்கர் (சுமார் 70,632 சதுர அடி) நிலத்தை 1960ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழக அரசு ரூ.33 ஆயிரத்து 941 என்ற விலையில், மணலி ராமகிருஷ்ண முதலியார் என்பவரிடமிருந்து கையகப்படுத்தியுள்ளது.
இப்போது மதிப்பு கூடிவிட்டது
இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.150 கோடியாம். பணத்தை பார்த்து ஆசைப்பட்ட ராமகிருஷ்ண முதலியாரின் சொத்து வாரிசுகள், சொத்தை விற்று 45 வருடங்களுக்கு பிறகு, அந்த சொத்து தங்களுக்கு பாத்தியப்பட்டது என்று கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
நீதிபதி தீர்ப்பு
உயர்நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி நீதிபதி கே.என்.பாஷா அளித்த தீர்ப்பில், முதலியார் வாரிசுகளுக்கே சொத்து சொந்தம். அவர்களிடம் ரூ.33 ஆயிரத்து 941 வாங்கிக்கொண்டு அரசு நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
காரணம் தெரியவில்லை
அரசு ஒரு நிலத்தை கையகப்படுத்தினால், அது என்ன காரணத்திற்காக கையகப்படுத்தப்பட்டது என்ற விவரம் இருக்க வேண்டும். இந்த வழக்கில் அந்த தகவலை அரசு தெரிவிக்கவில்லை என்பதால், முதலியார் வாரிசுகளுக்கே சொத்து சொந்தம் என்று நீதிபதி கூறியிருந்தார்.
காமராஜர் கையெழுத்து
இதனால் ஆளுநர் மாளிகைக்கு எதிரே உள்ள விலைமதிப்புள்ள இடம் அரசின் கைவிட்டு போகும் சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும் முயற்சியை கைவிடாத அரசு, ஒரு முக்கிய கோப்பை கண்டுபிடித்தது. அந்த கோப்பில், அப்போதைய துணை செயலாளர் முதல், அப்போதைய முதல்வரான பெருந்தலைவர் காமராஜர் வரையிலானோர் கையெழுத்திட்டிருந்தனர்.
சாலை அமைக்க
குறிப்பிட்ட அந்த நிலம், சாலை அமைக்கும் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட வேண்டும் என்ற ஆணையில்தான் காமராஜர் கையெழுத்திட்டிருந்தார். பழைய கிராம தஸ்தாவேஜுகளில் இருந்து அந்த கோப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு வெற்றி
இதையடுத்து சீராய்வு மனுவை தாக்கல் செய்தது தமிழக அரசு. நீதிபதிகள் ராமசுப்பிரமணியன் மற்றும் ரவிசந்திரபாபு அமர்வு முன்னிலையிலான டிவிஷன் பெஞ்சில் இது விசாரிக்கப்பட்டது. காமராஜரின் கையெழுத்தை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அந்த சொத்தை அரசே வைத்துக்கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்தனர்.
கையெழுத்து காத்தது
மேலும், வழக்கு தாக்கல் செய்த முதலியார் குடும்பத்தார், வெங்கடபுரம் கிராமத்திலுள்ள சொத்து என்றுதான் மனுவில் குறிப்பிட்டுள்ளனரே தவிர, சென்னையில், ஆளுநர் மாளிகை எதிரே உள்ள சொத்து என்று குறிப்பிடாமல் மறைத்துள்ளனர் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். எது எப்படியோ, அந்த ஒரு கையெழுத்தால், விலை மதிப்புள்ள சொத்து அரசின் கைவிட்டு போகாமல் தப்பியுள்ளது.