காஞ்சி சங்கர மடத்துக்கு ஒரே ஆண்டில் ரூ. 3,992 கோடி 'நன்கொடை': கிரைம் பிராஞ்ச் விசாரணை
சென்னை: காஞ்சிபுரம் சங்கர மடம் ஒரே ஆண்டில் ரூ. 3,992 கோடி நன்கொடை பெற்றது குறித்து பெங்களூர் கிரைம் பிராஞ்ச் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அன்னிய செலாவணி மோசடி நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பிரபல டெக்கன் ஹெரால்ட் நாளேட்டில் வந்துள்ள தகவல்:
கடந்த 2012ம் ஆண்டு மே 30ம் தேதி பெங்களூரைச் சேர்ந்த ஜெனிசிஸ் நிதி ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் எம்.எஸ். அசோக் குமார், ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், சங்கர மடத்தின் ஐ.சி.சி.ஐ., ஆக்சிஸ், சிட்டி யூனியன் வங்கிக் கணக்குகளில் ரூ. 3,992 கோடி செலுத்தப்பட்டுவிட்டது. இதை மடத்தின் நிர்வாகி ஸ்ரீதரன் என்பவர் உறுதியும் செய்திருக்கிறார்.
இந்த நன்கொடையைத் திரட்டிக் கொடுத்ததற்கு 2.5% "கமிஷன்" அடிப்படையில் மொத்தம் ரூ. 99.8 கோடி தரப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந் நிலையில் பெங்களூரைச் சேர்ந்த நீலகண்டாச்சாரி சுவாமிகள் மற்றும் 8 பேர் ஜெனிசிஸ் நிறுவனத்தின் மீது பெங்களூர் விஜயநகர் போலீசில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி புகார் கொடுத்தனர். அதில், சங்கர மடத்துக்கு நிதி திரட்டுவதில் ஜெனிசிஸ் மற்றும் 9 பேர் மோசடியிலும் நம்பிக்கை துரோகத்திலும் ஈடுபட்டதாகக் கூறியுள்ளனர்.
இந்த வழக்கு பெங்களூர் கிரைம் பிராஞ்ச் போலீசாரிடம் (Central Crime Branch, Bangalore) ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து காஞ்சி சங்கரமடத்தைச் சேர்ந்தவர்களிடம் கிரைம் பிராஞ்ச் விசாரணை நடத்தியது. அப்போது, மடத்தின் சார்பில் மழுப்பலான பதிலே சொல்லப்பட்டுள்ளது. காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் ரூ. 10,000 கோடி வரை நிதி திரட்டி, மடத்தின் சார்பில் செலவு செய்யும் அதிகாரம் ஸ்ரீதரன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக மட்டும் மடத்தின் சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. ஆனால், அவர் அவ்வளவு பணம் திரட்டினாரா என்ற விவரத்தை காஞ்சி மடம் விளக்கவில்லை.
அதே நேரத்தில் கிரைம் பிராஞ்சிடம் காஞ்சி சங்கர மடம் கடந்த 2 ஆண்டு நன்கொடையாளர் பட்டியலைத் தாக்கல் செய்திருக்கிறது. அதில் இவ்வளவு பெரிய தொகை பெறப்பட்டதாக எந்த ஒரு தகவலும் இல்லை.
காஞ்சி மடம் கொடுத்த பட்டியலின்படி, ரூ. 100 முதல் ரூ. 10,000 வரையே பலரும் நன்கொடை அளித்துள்ளனரே தவிர, யாரும் ரூ. 1 கோடி அளவுக்குக் கூட நன்கொடை தரவில்லை. மொத்தமாகவே மடத்துக்கு கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 15 கோடி தான் நன்கொடையாக வந்துள்ளது.
இதனால் ரூ. 3,992 கோடி எப்படி மடத்தின் கணக்குக்கு வந்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
காஞ்சி சங்கர மடத்துடன் தொடர்புடைய ஐந்து அறக்கட்டளைகள்தான் இந்த பண மோசடிக்கு பயன்படுத்தப்படுவதாகவும் கிரைம் பிராஞ்சுக்கு மடத்தின் சார்ட்டட் அக்கெளண்டன்ட் மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதனால் இந்த 5 அறக்கட்டளைகளின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து கிரைம் பிராஞ்ச் துணை ஆணையாளர் அபிஷே கோயல் கூறுகையில், இதில் நிறைய விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. சென்னைக்கு சென்றும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்றார்.
காஞ்சி சங்கர மடம் மற்றும் அதன் அறக்கட்டளைகள் மூலம் பெருமளவு கருப்புப் பணம் கைமாறுகிறதோ என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் கிரைம் பிராஞ்ச் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான முழு விவரம்: Kanchi Mutt had confirmed receipt of funds, claims firm