திருச்செந்தூர்: அக் 24ல் கந்த சஷ்டி விழா தொடக்கம்- 29ல் சூரசம்ஹாரம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் கந்த சஷ்டி விழா இம்மாதம் 24ம் தேதி தொடங்குகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில்.இங்கு நடைபெறும் முக்கிய விழாவில் கந்த சஷ்டி விழாவும் ஓன்று.
விரதத்தின் பலன்
"சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைபிடிக்கலாம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
ஆறு நாள் விரதம்
கந்த சஷ்டி விரதத்தை ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் உணவு உண்டு (பாலும் பழமும்) கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.
அக்டோபர் 24ல் சஷ்டி விரதம்
கந்த சஷ்டி திருவிழா வரும் அக் 24ஆம் தேதி துவங்குகிறது. திருச்செந்தூரில் அன்று அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப திபாராதனையும், 3 மணிக்கு உதய மார்த்தாண்டபூஜையும் நடக்கிறது.
யாகபூஜை
காலை 6 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலைக்கு எழுந்தருளுகிறார். காலை 7 மணிக்கு கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் யாகசாலை பூஜை தொடங்குகிறது.
ஜெயந்திநாதர் வீரவாள்
காலை 10 மணிக்கு உச்சிகால பூஜையை தொடர்ந்து மூலவருக்கு மகா தீபாராதனை நடக்கிறது. பின்னர் யாகசாலையில் மகா தீபாராதனையை தொடர்ந்து வேள்விசாலையிலிருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீரவாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களுடன் மேளவாத்தியம் முழுங்க சண்முகவிலாசம் சேர்ந்து தீபாராதனை நடைபெறுகிறது.
சூரசம்ஹாரம்
தினமும் காலை, இரவு வேள்வி பூஜை நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு சாயராட்சை திபாராதனை மற்றும் கால பூஜைகள் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரஹம்காரம் வரும் 29ஆம் தேதி நடக்கிறது.
திருக்கல்யாணம்
மறுநாள் 30ம் தேதி காலை 5 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 3 மணிக்கு கோயிலில் இருந்து சுப்பிரமணியசாமி எழுந்தருளி 6 மணிக்கு 5ம் சன்னதியில் மாலை மாற்றும் விழா நடக்கிறது. இரவில் சுப்பிரமணியசாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் கோயிலில் திருகல்யாணம் நடக்கிறது.
கந்த சஷ்டி விரதம்
திருச்செந்தூர் மட்டுமல்லாது முருகன் கோயில் உள்ள எல்லா இடங்களிலும் கந்த சஷ்டி விரதம் ஒரு பெருவிழாவாக நடக்கும். திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலையிலும், இலங்கையில் நல்லூர், சன்னிதி, கதிரமலை(கதிர்காமம்),மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்களிலும் மிகவும் சிறப்பாக இவ்விழா நடைபெற்று வருகின்றது.