ஸ்ரீரங்கம் தொகுதியில் கால் பதிக்க கனிமொழி திட்டம்?
சென்னை: திமுகவின் ராஜ்யசபா எம்.பி கனிமொழி, ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை தத்தெடுக்க விரும்புவதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த தொகுதியில் உள்ள திமுக பிரமுகர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளாராம்.
ஒவ்வொரு எம்.பி.யும் ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும்' என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து பிரபல கிரிக்கெட் வீரரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சச்சின் டெண்டுல்கர் ஆந்திர மாநிலத்தில் ஒரு கிராமத்தை தத்தெடுத்துள்ளார்.
தமிழகத்தை பொருத்தவரையில் இதுவரையில் எந்த ஒரு எம்.பி.யும் கிராமத்தை தத்தெடுப்பது பற்றி அறிவிக்கவில்லை. இந்நிலையில் திமுகவின் ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி, மாஜி முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை தத்தெடுக்க விரும்புவதாக தெரிகிறது.

கனிமொழி ஆலோசனை
கிராமத்தை தத்தெடுப்பது குறித்து ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள திமுக பிரமுகர்களுடன் கனிமொழி ஆலோசனை நடத்தியுள்ளாராம். விரைவில் இது குறித்த அறிவிப்பினை அவர் வெளியிடுவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீரங்கம் ஏன்?
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றதால், எம்.எல்.ஏ. பதவியை இழந்துள்ளார். இந் நிலையில் ஜெயலலிதா எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து செல்லும் வகையில் கனிமொழி இந்த தத்தெடுப்பில் இறங்கியுள்ளார் என்கிறார்கள்.

இடைத்தேர்தலில் போட்டி
அதோடு ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட, தி.மு.க., ஆர்வமாக உள்ளது. அதற்காக, சமீபத்தில் நடந்த தி.மு.க., மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், 'ஏற்காடு சட்டசபை இடைத்தேர்தலில், தி.மு.க., போட்டியிட்டது போல், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், தி.மு.க., போட்டியிட வேண்டும்' என, கட்சியின் தலைவர் கருணாநிதி பேசினார். இதனால், உடனடியாக, அந்த தொகுதியில் வாக்காளர்கள் பட்டியலை சரிபார்க்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும், கட்சியினரிடம் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையில், 'ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில், முத்தரையர் சமுதாயத்தினருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அப்போது தான், கட்சிக்கு கவுரவமான ஓட்டுகள் கிடைக்கும்' என, கருணாநிதியிடம் கனிமொழி வலியுறுத்தி உள்ளாராம்.

சட்டசபை தேர்தலுக்கு குறி
அது மட்டுமல்லாது... டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், முத்தரையர் இனத்தை, சேர்ந்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். கிட்டதட்ட, அந்த பகுதிகளில், 40 சட்டசபைத் தொகுதிகளில், வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய சக்தி, அந்த இனத்தவரிடம் உள்ளது. முத்தரையர் சமுதாயத்தின் ஓட்டுகளை, அ.தி.மு.க., தான் தொடர்ந்து பெற்று வருகிறது. அந்த ஓட்டு வங்கியை தி.மு.க., பக்கம் மாற்றுவதற்கு, வரும் சட்டசபை தேர்தலில், 10 தொகுதிகளில் முத்தரையர் சமுதாய வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்றும் கனிமொழி கூறியுள்ளார்.

கட்சிப்பதவியிலும்
இதற்காக, கட்சியிலும் மாவட்ட செயலர் பதவி உட்பட, பல்வேறு பதவிகளும் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் முத்தரையர் இனத்தைச் சேர்ந்தவர் ஒருவரை, தி.மு.க., சார்பில் வேட்பாளராக்க வேண்டும். இப்படி, நிறைய விஷயங்களை, கருணாநிதியிடம் கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications